இந்தியா

காதல் திருமணம் செய்துகொண்டதால் பெண் சுட்டுக் கொலை?  

webteam

காதல் திருமணம் செய்துகொண்டதால் தன் மனைவியை அவரது குடும்பத்தினர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டதாக கணவர் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

உத்திரப்பிரதேச மாநிலம் கவுதம் புத்தா நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிஷா(28). இவர் 30 வயதான சுனில் என்பவரை கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டுள்ளார். ஆனால் திருமணம் குறித்து பெண் வீட்டாருக்கு எந்தத் தகவலும் தெரியவில்லை.

இந்நிலையில் 5 மாதத்துக்கு முன்னர்தான் நிஷா திருமணம் குறித்து அவரது வீட்டாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து நிஷாவின் தந்தை மற்றும் சகோதரர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மனைவி நிஷாவை அவரது குடும்பத்தினர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டதாக அவரது கணவர் சுனில் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்ட ஜவார் பகுதி காவல்துறை நிஷாவின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

கொலைக் குற்றச்சாட்டு தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்