இந்தியா

மகள் கணவரின் அண்ணனைத் திருமணம் செய்த மாமியார்: பஞ்சாபில் ஆச்சரிய திருமணம்!

webteam

மகள் கணவரின் அண்ணனை திருமணம் செய்துகொண்ட மாமியார், போலீஸ் பாதுகாப்பு கேட்டு நீதிமன்றம் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரைச் சேர்ந்தவர் சுபா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 37. இவரது, 18 வயது மகளை அதே பகுதியைச் சேர்ந்த 21 வயது வாலிபர் ஒருவர் காதலித்தார். இரண்டு குடும்பமும் பேசியதை அடுத்து காதலுக்குப் பச்சைக் கொடி காட்டினர். கடந்த சில மாதங்களுக்கு முன் இவர்கள் திருமணம், இரு வீட்டார் சம்மதத்துடன் நடந்தது. 

சுபா மகளின் கணவருக்கு ஓர் அண்ணன். 22 வயதான அவருக்குத் திருமணம் ஆகவில்லை. அவர் குருதாஸ்புர் அருகில் உள்ள பதான்கோட்டில் வேலை பார்த்து வருகிறார். வேலை முடிந்து செல்லும்போது அடிக்கடி சுபாவின் வீட்டுக்கு வருவாராம். இதையடுத்து இருவருக்கும் காதல் மலர்ந்தது. இந்த முறை தவறிய காதலை, எப்படி வெளியில் சொல்வது என்று தெரியவில்லை. இருந்தாலும் காதல் கட்டுடைப்பதாயிற்றே.  சுபா, தனது கணவரை சத்தம் போடாமல் விவாகரத்து செய்துவிட்டு, கடந்த 2 ஆம் தேதி மருமகனின் அண்ணனை, மாலிக்பூரில் வைத்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்குமான வயது வித்தியாசம் 15 வருஷம்.

இந்த திருமணம், மகளுக்குத் தெரியாது. தற்செயலாக சில நாட்களுக்கு முன் அம்மாவை, தனது கணவனின் அண்ணனுடன் சேர்ந்து பார்க்க, ’இதென்ன கூத்து?’ என்று அதிர்ச்சி அடைந்தார். பிறகு குடும்பத்தினர் அமர்ந்து பேசி, இந்த முறை தவறிய திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் சுபாவும் மருமகனின் அண்ணனும் கேட்கவில்லை. நாங்கள் சேர்ந்துதான் வாழ்வோம், எங்களை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என்றனர். இதனால் குடும்பத்தினர் மிரட்ட, தங்களுக்குப் பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளனர் இருவரும். இந்த வழக்கு வரும் 31 ஆம் தேதி விசாரிக்கப்பட இருக்கிறது.

இந்த ஆச்சரிய திருமணம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.