சிபிஆர் மூலம் முதியவரின் உயிரை காப்பாறிய பெண் மருத்துவர் ட்விட்டர்
இந்தியா

டெல்லி | திடீரென மயங்கி விழுந்த முதியவர்... CPR கொடுத்து காப்பாற்றிய பெண் மருத்துவர்! #Video

Jayashree A

மருத்துவர்கள், கடவுளுக்கு சமமானவர்கள் என்பார்கள் சிலர். காரணம், அவர்கள் நம் உயிரை காப்பாற்றுபவர்கள். அதனாலேயே கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்குகூட, மருத்துவ நம்பிக்கை இருக்கும். காரணம், அறிவியல். மருத்துவமென்பது தொழிலாக அல்லாமல் சேவையாகவே பார்க்கப்படுகிறது. அப்படியொரு சேவை மனப்பான்மை கொண்ட பெண் மருத்துவரின் செயல்தான், தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. அப்படி என்ன செய்தார் அவர்? பார்க்கலாம்...

நேற்று முன்தினம் டெல்லி ஏர்போட்டில் நடந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று தற்பொழுது வைரலாகி வருகிறது. அதில் சுமார் 60 வயதை தாண்டிய முதியவர் ஒருவர் டெல்லி ஏர்போட் அருகில் இருக்கும் ஃபுட் கோர்ட் அருகில் நின்றுக் கொண்டிருந்தார். திடீரென்று அவருக்கு மாரடைப்பு வந்து மயங்கி கீழே விழுந்துள்ளார்.

CPR சிகிச்சை

என்ன செய்வது என்று தெரியாமல் யாவரும் சுற்றி இருக்க... விமான நிலையத்தின் டெர்மினல் 2 ல் இருந்த பெண் மருத்துவர் ஒருவர், எதைப்பற்றியும் யோசிக்காமல் உடனடியாக முதியவருக்கு cpr (Cardiopulmonary resuscitation) கொடுத்து அவரது உயிரை காப்பாற்றி இருக்கிறார்.

மட்டுமன்றி முதியவர் கண் விழிக்கும் வரை தொடர்ந்து இடையிடையே அவருக்கு நம்பிக்கை தரும்படி பேசிக்கொண்டே இருக்கிறார் அந்தப் பெண் மருத்துவர். இதன் பிறகு விமான நிலைய ஊழியர்களின் உதவியால் அந்த முதியவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

இந்த வீடியோ இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த மக்கள் பலரும் அந்தப் பெண் மருத்துவர் யாரென்ற விவரம் தெரியவராத போதும், அவரை மனம் நெகிழ பாராட்டி வருகின்றனர்.