இந்தியா

குத்துச்சண்டை வீராங்கனை மீது தாக்குதல்: 3 பேர் கைது

webteam

மேற்கு வங்கத்தில் குத்துச்சண்டை வீராங்கனையை தாக்கியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரபல குத்துச்சண்டை வீராங்கனை சுமன் குமாரி. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இவர், சமீபத்தில் தைவானில் நடந்த குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றவர். இந்திய அளவில் நடந்த பல போட்டிகளில் பரிசுகள் பெற்றுள்ளார்.  கொல்கத்தாவில் உள்ள மோமின்புர் பகுதியில் வசித்து வரும் இவர், மாநில விவசாயத்துறையில் பணியாற்றி வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டில் இருந்து ஸ்கூட்டியில் அலுவலகத்துக்கு கிளம்பினார். அப்போது இவரது வண்டியின் அருகே வந்த இளைஞர் ஒருவர், கடுமையாகத் திட்டிவிட்டு அருகில் நின்ற பேருந்தில் ஏறிவிட்டார். 

அதிர்ச்சி அடைந்த சுமன் குமாரி, பேருந்தை பின் தொடர்ந்து சென்றார். அடுத்த நிறுத்தத்தில் நின்றபோது, அந்த இளைஞரிடம் ஏன் திட்டினாய் என்று கேட்டார். பேருந்தில் இருந்து இறங்கிய அந்த வாலிபர், சுமன் குமாரியின் கழுத்தைப் பிடித்து ஆபாசமாகப் பேசியுள்ளார். அருகில் இருந்த போலீஸ்காரரை உதவிக்கு வருமாறு அழைத்தார். அவர் கண்டுகொள்ளவில்லை.

இதையடுத்து தனது முகப்புத்தகத்தில் இதுபற்றி விரிவாக எழுதிய சுமன் குமார், கொல்கத்தா போலீசுக்கு டேக் செய்தார். பின்னர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து நடவடிக்கையில் இறங்கிய போலீசார், ராகுல் சர்மா, ஷேக் பெரோஷ், வாசிம் கான் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர்.

இதையடுத்து போலீசுக்கு நன்றி தெரிவித்துள்ள சுமன் குமாரி, ’’ஒவ்வொரு பெண்ணும் தற்காப்பை கற்றுக்கொள்ள வேண்டும். நான் வலுவானவள் என்பதால் என்னை தற்காத்துக்கொள்ள முடிந்தது’’ என்றார். 

கடந்த சில நாட்களுக்கு முன், மாடலும் நடிகையுமான உஷோஷி சென்குப்தாவை ஒரு கும்பல் பின் தொடர்ந்து தொல்லை கொடுத்த விவாகரத்தின் சூடு ஆறுவதற்குள் நடந்துள்ள இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.