model image x page
இந்தியா

ஆபரேஷனில் சிக்கிய ஊசி! வலியால் துடித்த பெண்.. அலட்சியத்தில் மருத்துவமனை.. 20 ஆண்டுக்கு பிறகு நஷ்டஈடு

Prakash J

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஜெயநகரில் வசிப்பவர் பத்மாவதி. இவர், கடந்த 2004-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி, அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, ஹெர்னியாவுக்கு அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார். அப்போது அவருக்கு வயது 32.

இந்த அறுவை சிகிச்சையை அவருக்கு இரண்டு மருத்துவர்கள் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அடுத்தநாள் அவருடைய வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த மருத்துவமனையில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, அம்மருத்துவமனை, அவருக்குச் சில வலி நிவாரணி மருந்துகளை வழங்கியுள்ளது. மேலும் அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தைய காயம் மற்றும் வலி விரைவில் குணமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நம்பி, அவரும் வீட்டுக்கு வந்துள்ளார். ஆனாலும் அந்த வலி அவருக்கு தொடர்ந்து இருந்துள்ளது. இதற்காக மீண்டும் அந்த மருத்துவமனையில் 2 முறை அதே வலிக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனாலும், பிரச்னை தீரவில்லை.

இதையும் படிக்க; மகாராஷ்டிரா| தொடரும் மாரடைப்பு மரணங்கள்|ஜிம்மில் பயிற்சிசெய்த தொழிலதிபர் சுருண்டுவிழுந்து உயிரிழப்பு

இந்த நிலையில்தான், கடந்த 2019-ஆம் ஆண்டு பத்மாவதி இதே பிரச்னைக்காக வேறொரு மருத்துவமனையை அணுகியுள்ளார். அந்த மருத்துவமனையில் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது அவருடைய வயிற்றுப் பகுதியில் ஆபரேசன் செய்யப்பட்ட ஊசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வலிக்கு அதுதான் காரணம் எனவும் அறிவுறுத்தப்பட்டதுடன், உடனே அகற்றுவதற்கும் பரிந்துரைக்கப்பட்டது. பின்னர் அவருக்கு மீண்டும் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு, அவரது வயிற்றில் இருந்த 3.2 செ.மீ அளவுள்ள அறுவைச் சிகிச்சை ஊசி அகற்றப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக அவர், கர்நாடக மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை அணுகினார். இதை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம் பத்மாவதிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் கம்பெனிக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் பத்மாவதிக்கு முதல்முறை அறுவைச் சிகிச்சை செய்த 2 பெண் மருத்துவர்களும் இந்த வழக்குச் செலவுக்காக ரூ.50,000 செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க:மத்தியப் பிரதேசம்|சாலை அமைக்க எதிர்ப்பு.. போராடிய 2 பெண்கள் மீது மண்ணைக் கொட்டி மூடிய கொடூரம் #Video