மாதபி புரி புச் pt web
இந்தியா

யார் இந்த மாதபி புரி புச்... இவருக்கும் ஹிண்டன்பர்க் அறிக்கைக்கும் என்ன தொடர்பு?

PT WEB

செய்தியாளர் கௌசல்யா

செபியின் முதல் பெண் தலைவர்

தினமும் பல லட்சம் கோடி ரூபாய் புரளும் இடம்தான் பங்குச்சந்தைகள்னு எல்லோருக்கும் தெரியும். இதுல ஏராளமான சிறு முதலீட்டாளர்கள் மட்டுமல்ல.. உள்நாட்டு நிதிநிறுவனங்களும், அந்நிய முதலீட்டாளர்களும் முதலீடு செய்கின்றனர். அதனால, இந்த பங்குச்சந்தைகளை கண்காணிப்பதோடு, அவ்வப்போது விதிமுறைகளை வகுத்து கொடுக்க ஏற்படுத்தப்பட்டதுதான் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி.

இவ்வளவு பெரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் தற்போதைய தலைவர் பதவியை அலங்கரிக்கும் மாதபி புரி புச், செபியின் முதல் பெண் தலைவர் என்ற பெருமைக்குரியவர். தனியார் துறையில் இருந்து செபியின் தலைவராக பொறுப்பேற்ற நபரும் இவரே. 2017ஆம் ஆண்டு செபியில் முழுநேர இயக்குநராகச் சேர்ந்த மாதபி புரி புச்சிற்கு கூட்டு முதலீட்டுத் திட்டங்களை கண்காணிக்கும் பணி வழங்கப்பட்டது.

3 தசாப்த பங்குச் சந்தை அனுபவம்

முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்பட்ட 14 ஆயிரம் கோடி ரூபாயை முழுமையாக மாற்றத் தக்க கடனீட்டுப் பத்திரங்கள் மூலம் திருப்பித் தருமாறு 2018ஆம் ஆண்டு சஹாரா குழுமத்திற்கு உத்தரவு பிறப்பித்தவரும் இவரே. இதுமட்டுமல்லாமல், 2021ஆம் ஆண்டு INSIDER TRADING விவகாரத்தில் சிக்கிய தனியார் தொலைக்காட்சி பத்திரிகையாளர் ஹேமந்த் காய் மீது விரிவான விசாரணை நடத்தி அவர் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யத் தடை விதித்தார். இதுபோல, பல ஒழுங்குமுறை உத்தரவுகளை பிறப்பித்த மாதபி புச், 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி அவர் செபி தலைவராக பொறுப்பேற்றார். இதற்கு முன் ஐஏஎஸ் அதிகாரிகளும், அரசுத்துறையில் பணியாற்றிய பொருளாதார நிபுணர்களும்தான் செபியின் தலைவராக இருந்திருக்கின்றனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பங்குச் சந்தைகளில் மாதபி புரி புச்- சிற்கு அனுபவம் என்றால், கிட்டத்தட்ட 3 தசாப்தங்கள் எனக் கூறலாம். 1989ஆம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியில் முதலீட்டு ஆலோசகராக இணைந்த இவர், ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் பணியாற்றியிருக்கிறார். முன்னணி தரகு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பையும் வகித்தவர். தனியார் பங்கு நிறுவனத்திலும் மூத்த அதிகாரியாக வலம் வந்த மாதபி புரி, பிரிக்ஸ் நாடுகள் உருவாக்கிய நியூ டெவலப்மெண்ட் வங்கியின் ஷாங்காய் அலுவலகத்தில் சிறிது காலம் பணியாற்றியிருக்கிறார்.

தற்போதைய குற்றச்சாட்டு 

அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம்-மில் எம்பிஏ பயின்ற மாதபி புரிக்கு, அவரது 18ஆவது வயதில் தவல் புச்சை மணம் முடிக்க நிச்சயம் செய்யப்பட்டிருக்கிறது. 21 வயதில் திருமணம் நடைபெற்ற நிலையில், அபே என்ற மகனும் உள்ளார். மாதபி புரியை மணம் முடித்தபோது தவல் புச், பன்னாட்டு நுகர்பொருள் நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றிக் கொண்டிருந்தார். டெல்லி ஐஐடியில் மெகானிக்கல் இஞ்சினியரிங் பயின்ற தவல் புச், யுனிலீவர் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். கில்டன் நிறுவனத்தில் இயக்குநர் குழுமத்தில் NON EXECUTIVE DIRECTORஆக பணியாற்றிய இவர், தற்போது பிளாக் ஸ்டோன் மற்றும் ALVAREZ AND MARSAL ஆகிய நிறுவனங்களில் ஆலோசகராக இருக்கிறார்.

முக்கியத்துவம் வாய்ந்த செபியின் தலைவராக இருக்கும் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவல் புரி ஆகியோர் மீது அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட குற்றச்சாட்டு அறிக்கைதான் இப்போ வைரல். அதானி குழும முறைகேடு சர்ச்சையில் தொடர்புள்ளதாகக் கூறப்படும் வெளிநாட்டு நிறுவனத்தில் செபி அமைப்பின் தலைவர் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவரும் பங்குகளை வைத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டுதான் அது. இதனை செபி தலைவர், அதானி குழுமமும் மறுத்துள்ளன.