கே.சந்திரசேகர் ராவ் புதிய தலைமுறை
இந்தியா

கேசிஆரின் ஆட்சி கவிழ்வதற்கு இதுதான் ’முதல்’ காரணம்! தெலங்கானா மக்கள் ஏற்றுக்கொள்ளாதது இதனால்தான்!

Prakash J

தெலங்கானா தனி மாநில போராட்டத்தைத் தீவிரமாக முன்னெடுத்த தலைவர்களில் ஒருவரான சந்திரசேகர் ராவ், பின்னர் அதையே அடித்தளமாக வைத்து தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியை தொடங்கி, தொடர்ந்து 2 முறை தேர்தலில் வெற்றிக்கொடி நாட்டினார். சந்திரசேகர் ராவின் அரசியல் பாணியே தனியானது... பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்டவர்கள், பிராமணர்கள், இஸ்லாமியர்கள் என சமூக வாரியாக நலத்திட்டங்களை அறிவிப்பதுதான் அவரது தனிப்பாணி. விவசாயிகளுக்கு என இவர் அறிவித்த ரைத்து பந்து திட்டம் தேசிய அளவிலும் கவனத்தை ஈர்த்தது.

தெலங்கானா

இதுபோன்ற வியூகங்கள் மூலம் தொடர்ச்சியாக 3ஆவது முறையாக ஆட்சியமைக்கும் இலக்கோடு இருந்த கேசிஆரின் கனவை நிராசையாக்கியுள்ளனர் தெலங்கானா மக்கள். முதல்முறையாக அம்மாநிலத்தில் சந்திரசேகர் ராவ் அல்லாத ஒருவர் முதலமைச்சராக உள்ளார். தான் போட்டியிட்ட காமாரெட்டி தொகுதியில் 3ஆவது இடத்திற்கு தள்ளப்படும் அவலத்திற்கு ஆளாகியுள்ளார் கேசிஆர். அவரது இத்தோல்விக்கு சில காரணங்கள் கூறப்படுகின்றன.

இதையும் படிக்க: ராஜஸ்தான்: பாஜக வெற்றி.. முதல்வர் ரேஸில் யார்? மீண்டும் வசுந்தரா ராஜே சிந்தியாவுக்கு வாய்ப்பு?

30 முதல் 40 எம்எல்ஏக்கள் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை சம்பாதித்திருந்த நிலையில் அவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளித்தது ஒரு காரணமாக கூறப்படுகிறது.

கேசிஆர் தேசிய அரசியலில் கால்பதிக்க முனைப்பு காட்டியதுடன், அதற்காக கட்சியின் பெயரில் இருந்த தெலங்கானா என்ற பெயரையும் நீக்கினார். இதுதான் முதல் காரணமாகப் பார்க்கப்படுகிறாது.

மேலும், இதனால் தெலங்கானா மாநிலத்துக்கு மட்டுமான கட்சி என்ற அடையாளத்தையும் அக்கட்சி இழந்தது. அதேநேரம் தேசிய அரசியலில் வலம்வர நினைத்த கேசிஆரின் இலக்கும் குறி தவறிவிட்டது. இதோடு காங்கிரஸ் கட்சியின் கச்சிதமான தேர்தல் வியூகம், ஆட்சிக்கு எதிரான மனநிலை, ஊழல் புகார்கள், குடும்ப அரசியல், நிறைவேற்றாத வாக்குறுதிகள் என மேலும் பல காரணங்கள் கேசிஆரின் ஆட்சி கவிழ காரணமாகிவிட்டது.

தெலங்கானாவில் கே சி ஆரின் தோல்விக்கு காரணம் சில: *மாநில அரசியலை விட்டு தேசிய அரசியலை அதிகம் கவனம் செலுத்தியது *அதிக அளவில் எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகள் *வாரிசுகளின் அதீத ஆதிக்கம் *காங்கிரஸ் கட்சி & ரேவந்த் ரெட்டியை குறைத்து மதிப்பிட்டது * முந்தைய வாக்குறுதிகளை நிறைவேற்றாதது *அதீத அதிகாரம் *இரண்டு முறை தொடர் ஆட்சியில் இருப்பதால் இயல்பான மக்களின் மனநிலை