திருப்பதி லட்டு விவகாரம் முகநூல்
இந்தியா

திருப்பதி லட்டு விவகாரம்: ஜெகன் மோகன் Vs சந்திரபாபு நாயுடு.. நடப்பது உணவு கலப்படமா, அரசியல் ஆதாயமா?

PT WEB

செய்தியாளர்: தினேஷ் குணகலா

‘ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டது’ என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நேற்று முன்தினம் குற்றம்சாட்டினார். மேலும், தங்கள் ஆட்சியில் தற்போது பிரசாதத்தின் தரத்தை மீட்டெடுத்துள்ளதாகவும் விளக்கம் அளித்திருந்தார். இது ஆந்திர அரசியலில் புயலையே கிளப்பியுள்ளது.

வழக்கமாகவே திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமிருக்கும். இப்போதோ பெருமாளுக்கு உகந்ததாக கருதப்படும் புரட்டாசி மாதம் ஆரம்பித்திருக்கிறது. இதனால் வழக்கத்தை விடவே அதிக பக்தர்கள் வந்தவண்ணம் இருக்கிறார்கள். கோயிலுக்குச்செல்லும் பக்தர்கள், மற்ற பிரசாதங்களை விட லட்டை விரும்பி வாங்கி வரும் நிலையில், அந்த லட்டு தயாரிப்பில் புதிய புயலை கிளப்பியிருக்கிறார் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு. இவ்விவகாரத்தில் இதுவரை என்ன நடந்தது? பார்க்கலாம்....

ஆந்திர மாநிலம் அமராவதியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, “புகழ்பெற்ற திருப்பதி லட்டு பிரசாதத்தின் புனிதத்தன்மையை ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு கெடுத்து விட்டது. பக்தர்களால் மிகவும் புனிதமானதாகக் கருதப்படும் திருப்பதி லட்டு, கடந்த ஆட்சியில் சுத்தமான நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு பிரசாதத்தின் தரத்தை மீட்டெடுத்துள்ளது. தற்போது தூய்மையான நெய்யை பயன்படுத்துகிறோம்” என குற்றம்சாட்டினார்.

இதற்கு ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் தரப்பில் இருந்து கடும் அதிருப்தி கிளம்பியுள்ளது. “விஜயவாடா வெள்ளம் மீட்பு பணிகள் போன்றவற்றில் ஏற்பட்ட தோல்விகளை திசைதிருப்பவே, தற்போது திருமலா பிரசாதம் குறித்து அவதூறு பரப்புகிறார்கள்” என ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் தரப்பில் இருந்து பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில் ‘சந்திரபாபு நாயுடு குடும்பத்தோடு திருப்பதி மலைக்கு வந்து சத்தியம் செய்ய தயாரா?’ என்று தேவஸ்தான அறங்காவலர் குழுவின் முன்னாள் தலைவரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மாநிலங்களவை எம். பியுமான சுப்பா ரெட்டி சவால் விடுத்துள்ளார்.

திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பா?

அதேபோல திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவர் பூமனா கருங்கர் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருமலையின் பிரசாதங்கள் குறித்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுகள் மிகவும் மோசமானவை. கடவுளை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்துபவர்களை கடவுள் மன்னிக்க மாட்டார். அரசியல் எதிரிகளை கடவுளின் பெயரால் குற்றம்சாட்டுவது சந்திரபாபு நாயுடுவுக்கு புதிதல்ல” என்றும் பூமனா கருங்கர் ரெட்டி விமர்சித்துள்ளார்.

இதற்கிடையே திருப்பதி லட்டானது ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது. ஆய்வின் முடிவில் லட்டில் மீன் எண்ணெய், சோயா பீன்ஸ், சூரியகாந்தி எண்ணெய் போன்றவைகளுடன் மாட்டுக் கொழுப்பு கலந்திருப்பதாக கூறியுள்ளது. இது பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இவையாவும், பக்தர்கள் புனிதமாக கருதும் திருப்பதி பிரசாத லட்டு தயாரிப்பில், ஆந்திர முதலமைச்சரே எழுப்பியுள்ள இந்த சர்ச்சை, அரசியல் ஆதாயமா? பக்தர்களின் உணர்வோடு விளையாடுவதா என்ற கேள்வியையும் உருவாக்கியுள்ளது.