இந்தியா

அயோத்தியில் மிகப்பெரிய ராமர் சிலை நிச்சயம் அமைக்கப்படும் - முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

webteam

அயோத்தியில் மிகப்பெரிய ராமர் சிலை நிச்சயம் அமைக்கப்படும் என உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் உலகிலேயே மிக உயரமான வல்லபாய் படேலின் சிலையை அவரது பிறந்தநாளன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் மிகப்பெரிய  ராமர் சிலையை அமைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

(மாதிரிப்படம்)

இதுகுறித்து கருத்து தெரிவித்த உத்திரப்பிரதேச மாநில பாஜக தலைவர் மகேந்திர நாத் பாண்டே, யோகி ஆதித்யநாத் ஒரு துறவி. அதனடிப்படையில் அவர் அயோத்திக்காக ஏதாவது திட்டம் வைத்திருப்பார். அயோத்தியில் கோவில் தொடர்பாகவும் தீபாவளியில் நிச்சயம் நல்ல செய்தி ஒன்றை அவர் வெளியிடுவார் என்றும் தெரிவித்திருந்தார்

இந்நிலையில் நேற்று பேசிய முதலமைச்சர் யோகி, அயோத்தி நகரம் அமைந்துள்ள ஃபைஸாபாத் மாவட்டத்துக்கு அயோத்தி மாவட்டம் என பெயர் சூட்டப்படும் எனவும்  அயோத்தியில் ’கிங் தசரத்’ பெயரில் மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். அயோத்திக்கு யாரும் அநீதி செய்ய முடியாது எனவும் அயோத்தியில் ராமர் பெயரில் விமான நிலையம் அமைக்கப்படும் எனவும் கூறினார். ஆனால் ராமர் சிலை குறித்து ஏதும் பேசவில்லை.

(யோகி ஆதித்யநாத்)

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய யோகி ஆதித்யநாத் அயோத்தி நகரம் உத்திரபிரதேசத்தின் சிறந்த நகரமாக கட்டமைக்கப்படும் என்றும், அயோத்தியில் மிகப்பெரிய ராமர் சிலை நிச்சயம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் ராமர் சிலை அமைக்க 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.