kerala landslide facebook
இந்தியா

மலை உச்சியில் தஞ்சமடைந்த பழங்குடியின குடும்பம்; மீட்ட வனத்துறை! தோள்களில் தஞ்சமடைந்த குழந்தைகள்!

முண்டக்கையில் நிலச்சரிவு ஏற்பட்டு நான்கு நாட்களுக்குப் பிறகு ஒரு பழங்குடி குடும்பத்தை உயிருடன் பத்திரமாக மீட்டுள்ளது வனத்துறை. நிலச்சரிவுக்குப் பிறகு இவர்கள் மலை உச்சிக்குச் சென்று தஞ்சமடைந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

PT WEB

முண்டக்கையில் நிலச்சரிவு ஏற்பட்டு நான்கு நாட்களுக்குப் பிறகு ஒரு பழங்குடி குடும்பத்தை உயிருடன் பத்திரமாக மீட்டுள்ளது வனத்துறை. நிலச்சரிவுக்குப் பிறகு இவர்கள் மலை உச்சிக்குச் சென்று தஞ்சமடைந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

வனத்துறை வீரர்களின் தோள்களில் குழந்தைகள் பத்திரமாக தஞ்சமடைந்திருக்கிறார்கள். இதோ பாதுகாப்பான கரங்களுக்குள் வந்துவிட்டோம் என்ற நம்பிக்கை அவர்களின் கண்களில் பிரகாசிக்கிறது.

பேரழிவு ஏற்பட்ட இடத்தில் இருந்து மிகவும் ஆறுதல் தரக்கூடிய அழகான காட்சியை இப்போதுதான் கண்டிருக்கிறோம். நிலச்சரிவுக்குப் பிறகு காணாமல் போனவர்களை வனத்துறையினரும், தீயணைப்புப்படை வீரர்களும் தேடிவந்த நிலையில், ஒரு பழங்குடி குடும்பம் குறித்து தகவல் அறிந்து வனத்துக்குள் தேட ஆரம்பித்தனர்.

தனது கணவரும், 3 குழந்தைகளும் எங்கோ சிக்கியிருப்பதாக சாந்தா என்ற பழங்குடி பெண் அளித்த தகவலின் பேரில் மீட்புக் குழுவினர் தங்கள் தேடுதல் பணிகளைத் தொடர்ந்தனர். வனத்துக்குள் மிகக்கடினமான பாதைகளை கடந்து, பல கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்து சென்று வனத்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் மணிக்கணக்கில் தேடிக்கொண்டிருந்தனர்.

ஒருவழியாக, Soochipara அருவிக்கு அருகே, Eratukund காலனியில் Padavetti Kunnu என்ற இடத்தில் மலையில் கிருஷ்ணனும், அவரின் மூன்று குழந்தைகளையும் வனத்துறையினர் கண்டுபிடித்தனர். நிலச்சரிவில் இருந்து தப்புவதற்காக இவர்கள் மலையில் ஏறி பாதுகாப்பாக தஞ்சமடைந்தது தெரியவந்துள்ளது. 2 நாட்களாக எந்த உணவும் சாப்பிடாமல் நான்கு பேரும் பட்டினி கிடந்துள்ளனர்.

இவர்களுக்கு வனத்துறையினர் தாங்கள் கொண்டு வந்திருந்த உணவுப்பொருட்களை சாப்பிடக்கொடுத்தனர். அத்துடன் நான்கு பேரையும் பத்திரமாக மீட்டுள்ளனர். எந்த பூகம்பத்திலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது.