இந்தியா

விஜய் மல்லையாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்

webteam

விஜய் மல்லையா ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் வங்கிகளில் கடன் பெற்றுவிட்டு திரும்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச்சென்றார். அவருக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

தொழிலதிபர் விஜய் மல்லையா 17 வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பெற்றுக்கொண்டு இந்தியாவிலிருந்து தப்பிசென்று லண்டனில் குடியேறிவிட்டார். இதில், ஐடிபிஐ வங்கிக்கு செலுத்த வேண்டிய ரூ.750 கோடிக்கும் மேற்பட்ட கடனும் அடங்கும். இதுகுறித்து அமலாக்கப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்து, சமீபத்தில் மும்பையில் உள்ள பணமோசடி தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விஜய் மல்லையா மீதான இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். 61 வயதான விஜய் மல்லையா சமீபத்தில் லண்டனில் போலீசாரிடம் சிக்கினார். பின்னர், அவரை அங்குள்ள நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.