இந்தியா

சபரிமலையில் அலைமோதும் பக்கதர்கள் கூட்டம்: நாள்தோறும் 45 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி

kaleelrahman

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் டிசம்பர் 9ஆம் தேதி முதல் மகரவிளக்கு தினமான 2022 ஜனவரி 14ம் தேதி வரை தினசரி 45 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்க தேவஸ்வம் போர்டு முடிவு செய்துள்ளது.

கேரளாவின் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 15ம் தேதி நடை திறக்கப்பட்டு 16ம் தேதி முதல் முன்பதிவு செய்த 30 ஆயிரம் பக்தர்கள் தினசரி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் தரிசனத்திற்காக முன்பதிவு செய்யாதவர்களுக்கு நிலக்கல்லில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்கள் 'ஸ்பாட் புக்கிங்' மையங்கள் மூலம் முன்பதிவு செய்து தரிசனம் செய்து வருகின்றனர்.

இதனால் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெள்ளிக்கிழமையான நேற்று 27,840 பக்தர்கள் தரிசனம் செய்து இருந்த நிலையில், சனிக்கிழமையான இன்று ஒரே நாளில் 42,354 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

இதனால் வரும் டிசம்பர் 9ஆம் தேதி முதல் மகரவிளக்கு தினமான 2022ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி வரை 'வெர்ச்சுவல் க்யூ',மூலம் தினசரி முன்பதிவு செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரமாக அதிகரிக்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. அதோடு 'ஸ்பாட் புக்கிங்' முன்பதிவு மூலம் தினசரி 5000 பக்தர்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் டிசம்பர் 9ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி வரை தினசரி 45 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதால் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், போக்குவரத்து, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன

டிசம்பர் 26ம் தேதியோடு மண்டல பூஜை நிறைவடைந்து நடை அடைக்கப்படும். தொடர்ந்து வரும் டிசம்பர் 30ம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு 2022ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி நடை அடைக்கப்படும். 2022ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடக்க இருக்கிறது.