தலைமை பயிற்சியாளர் பதவி யாருக்கு புதிய தலைமுறை
இந்தியா

தலைமை பயிற்சியாளர் பதவி; கம்பீருடன் போட்டியிடும் மற்றொரு இந்தியர் யார்?

PT WEB

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியான நிலையில், அப்பதவிக்கான போட்டியில் மேலும் ஒரு இந்தியரும் இருந்து வருகிறார்.

இதனிடையே, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில், ரோகித் சர்மா கேப்டனாக செயல்படமாட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம், நடப்பு டி20 உலக கோப்பையுடன் நிறைவுக்கு வருகிறது.

டிராவிட், காம்பீர்

இதனால் அணியின் பயிற்சியாளர் யார் என கேள்வி எழுந்த நிலையில், கவுதம் கம்பீர் அப்பதவியில் நியமிக்கப்படுவார் என தகவல் வெளியானது.

ஆனால் தற்போது, தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கம்பீருடன், W.V.ராமனும் போட்டியிட்டு வருவதாகவும், இருப்பினும் கம்பீருக்கே அப்பதவி கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து கம்பீர், இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் பதவியை ஏற்குமாறு ஜான்டி ரோட்ஸிடம் பேசிவருவதாக, தகவல்கள் கூறுகின்றன. இதனிடையே டி20 உலக கோப்பைக்கு பின்னர் ஜூலை மாதத்தில் இந்திய அணி, ஜிம்பாப்வே சென்று டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்பட்டாலும், அத்தொடரில் அவர் அணியோடு பயணிக்கமாட்டார் என இந்திய கிரிக்கெட் வாரிய வாட்டாரங்கள் கூறுகின்றன.

இலங்கைக்கு எதிரான தொடரின் போதே அவர் அணியோடு இணைவார் எனவும், ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரில் வி.வி.எஸ் லக்ஷ்மண் பயிற்சியாளராக செயல்பாடுவார் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அத்தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்படவுள்ளதாகவும், சூர்ய குமார் யாதவ் அல்லது ஹர்திக் பாண்டியா இந்திய அணியை வழிநடத்துவார் எனவும், இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் கூறுகின்றன.

ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி, இந்த வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அணி அறிவிக்கப்படும்போது, அடுத்ததலைமை பயிற்சியாளர் குறித்து அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.