Tragic attempt pt desk
இந்தியா

புதுச்சேரி: ஆன்லைன் முதலீட்டில் பணத்தை இழந்தவர், குடும்பத்துடன் விபரீத முயற்சி...

webteam

செய்தியாளர்: ரகுமான்

புதுச்சேரி அடுத்த விழுப்புரம் மாவாட்டம் தென்னல் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகாந்த் (30). இவர், மனைவி வாணி மற்றும் 1 வயது குழந்தையுடன் புதுச்சேரியில் உள்ள வில்லியனூர் பகுதியில் வாடகைக்கு வசித்து வருகிறார்.

ஆன்லைன் முதலீட்டில் பணத்தை இழந்த விஜயகாந்த், தனது நண்பர்கள் பலரிடம் கடன் பெற்று, அதனையும் ஆன்லைன் மூலம் இழந்துள்ளார். இதனால் கடன் தொல்லைக்கு ஆளான அவர், மனைவி மற்றும் குழந்தையுடன் ஊசுட்டேரி பூங்காவிற்குச் சென்றுள்ளார்.

புதுச்சேரி - விஜயகாந்த் குடும்பம்

அங்கு, விஷம் சாப்பிட்டு குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்று உள்ளார். பின்னர், அங்கிருந்து மோட்டார் பைக்கில் புதுச்சேரி நோக்கி சென்றுள்ளார். வழியில் மேட்டுப்பாளையம் பூங்கா அருகே வந்தபோது, மூன்று பேரும் மயங்கி கீழே விழுந்துள்ளனர். இதைகண்ட அருகில் இருந்தவர்கள் மூவரையும் மீட்டு அருகில் உள்ள கதிர்காமம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இதற்கிடையே மயங்கி விழுந்து சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த், சட்டை பையில் கடிதம் ஒன்றை வைத்துள்ளார். அதில், “எனது மரணத்திற்கு எம்.எம். குப்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர்தான் காரணம். கடனுக்காக எனது நண்பரிடம் இருந்து நான் வாங்கிக் கொடுத்த பத்திர ஆவணத்தை பெற்றுக் கொண்டு, பணம் ஏதுவும் தராமல் ஏமாற்றியதுடன் பத்திரத்தை திரும்பத் தராமல் ரூ. 5 லட்சம் கேட்டு தொல்லை தருகிறார் அப்பெண்” என எழுதியிருந்தார். இதையடுத்து இந்தச் சம்பவம் குறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.