இந்தியா

பசியால் பச்சை தாவரங்களை உட்கொண்ட குழந்தைகள்? : வைரலான புகைப்படத்தால் பதறிய அதிகாரிகள்

webteam

உத்தரப்பிரதேசம் மாநிலம் கொரைப்பூர் கிராமத்தில் உள்ள முசாஹர் சமூகத்தைச் சேர்ந்த ஆறு குழந்தைகள் செடியில் உள்ள ஏதேனும் ஒன்றை சாப்பிடுவதை அறிந்த வாரணாசி மாவட்டத்தின் பராகான் பகுதியில் உள்ள உள்ளூர் நிர்வாகம் குழந்தைகளின் குடும்பங்களுக்கு உதவி செய்ய விரைந்தது.

சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலானது. அதில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 6 குழந்தைகள் செடிகளில் இருந்த ஏதோ ஒன்றை சாப்பிட்டுக்கொண்டு இருக்கின்றனர். இதையடுத்து அந்த குழந்தைகள் கொரைப்பூர் கிராமத்தில் உள்ள முசாஹர் சமூகத்தைச் சேர்ந்த ஆறு குழந்தைகள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த வாரணாசியின் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு உதவி செய்ய விரைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து உள்ளூர் செய்தித்தாள் நிருபர் ஒருவர் கூறியதாக பரகான் நிலைய அதிகாரி சஞ்சய் சிங் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் “முஷாஹர்களுக்கான காலனியில், உணவு பற்றாக்குறை இருப்பதாக ஊடகவியலாளர் என்னிடம் கூறினார். நான் உடனடியாக எஸ்.டி.எம் [துணைப்பிரிவு மாஜிஸ்திரேட்] க்கு இதுகுறித்து தெரிவித்தேன். அவர் சம்பந்தப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு உதவுமாறு தஹ்சில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். குழந்தைகளின் குடும்பங்களுக்கு பஞ்சாயத்திலிருந்து 10 கிலோ அரிசி, சமையல் எண்ணெய், உருளைக்கிழங்கு மற்றும் சில அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. இன்றும் அவர்களுக்கு இன்னும் சில உதவி வழங்கப்பட்டுள்ளது. நானே நேரில் சென்று உறுதி செய்தேன். சில குழந்தைகளின் பெற்றோர் தினசரி கூலித் தொழிலாளர்கள், மற்றவர்கள் தெருக்களில் பிச்சை எடுக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து மாவட்ட நீதிபதி கவுசல் ராஜ் சர்மா கூறுகையில், “இந்த கிராமத்தின் குழந்தைகள் செடியிலிருந்து அக்ரி பருப்பு மற்றும் சில பருப்பு வகைகளை சாப்பிடுகிறார்கள். புகைப்படத்தில் காணப்பட்ட குழந்தைகளும் அதை சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். இந்த குழந்தைகளின் குடும்பங்கள் ரேஷன் கார்டு வைத்திருக்கின்றனர். இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்களையும் அவர்கள் பெற்றுள்ளனர். அவர்களுக்கு இன்று கூடுதல் ரேஷனும் வழங்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.