உத்தரப்பிரதேசம் எக்ஸ் தளம்
இந்தியா

கணவரின் நீண்ட ஆயுளுக்கு விரதம்.. முடித்தபின்பு மனைவி வைத்த ட்விஸ்ட்.. உபியில் அரங்கேறிய சோகம்!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கர்வா சவுத் விரதத்தை முடித்த கையுடன் தன் கணவருக்கு விஷம் வைத்து கொன்ற சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

வட இந்தியாவில் பெரும்பாலும் பல மாநிலங்களில் ‘கர்வா சவுத்’ என்ற பெயரில் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கணவன்மார்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ, மணமான இந்து பெண்கள் விரதமிருந்து இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர். இதன்மூலம், தனது கணவர்களின் ஆயுள் கூடும் என அவர்கள் நம்புகின்றனர்.

இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், இவ்விரதத்தை முடித்த கையுடன் தன் கணவருக்கு விஷம் வைத்து கொன்ற சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள இஸ்மாயில்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷைலேஷ் குமார். இவரது மனைவி சவிதா. இந்த நிலையில் நேற்று, தன் கணவரின் நீண்ட ஆயுளுக்காக கர்வா சவுத் விரதத்தை, சவிதா மேற்கொண்டுள்ளார். மனைவியின் இந்தப் பிரார்த்தனைக்காக அவரது கணவர் ஷைலேஷ் குமாரும் அவருக்கு உதவியாக இருந்துள்ளார்.

பின்னர், மாலையில் கர்வா சவுத் விரதத்தை முடித்த பின்பு கணவன் மனைவி இருவரும் இணைந்து சாப்பிட்டுள்ளனர். இதில் கணவருக்குத் தெரியாமல் மனைவி விஷம் வைத்துள்ளார். அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே, பக்கத்து வீட்டுக்குச் சென்றுவருகிறேன் எனச் சொல்லிவிட்டு சவிதா தப்பிச் சென்றுள்ளார். உணவைச் சாப்பிட்ட கணவர் ஷைலேஷ் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.

பின்னர் அவரது சகோதரர் அகிலேஷ் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனிறி உயிரிழந்தார். இச்சம்பவம் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில், சவிதா வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ”எனது கணவருக்கும் இன்னொரு பெண்ணுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்தது. அதன் காரணமாகவே அவரை விஷம் வைத்துக் கொன்றேன்” எனத் தெரிவித்துள்ளார். தற்போது சவிதா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க: வேகம் காட்டும் இஸ்ரேல்| அழிக்கப்படும் தலைவர்கள்.. அடுத்த தலைவர் யார்? பட்டியல் ரெடி செய்த ஹமாஸ்!