இந்தியா

கனமழையால் கடும் பாதிப்படைந்துள்ள உத்தராகண்ட்

Sinekadhara

பெருமழையால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள உத்தராகண்டில் 65 சதவிகித சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ள பாதிப்பில் இதுவரை 8 பேர் உயிரிழந்த நிலையில், அல்மோரா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல வீடுகள் சிக்கியுள்ளதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். யானை ஒன்றும் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டுள்ளது. தொடர் கனமழையால் பவுரி, லான்ஸ் டவுன், சம்பாவாட் உள்ளிட்ட இடங்களில் கடும் பாதிப்படைந்துள்ள நிலையில், கோசி உள்ளிட்ட நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மீட்பு பணிகளை தொடர்வதில் சிக்கல் இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. பல்வேறு இடங்களில் நிலச்சரிவு அபாயம் நீடிப்பதால் சுற்றுலாப் பயணிகள் சொந்த ஊர் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

பாதிப்பு நிலவரம் குறித்து உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய உத்தரவிட்டுள்ளார்.