நிகழ்வு நடந்த பகுதி pt web
இந்தியா

உ.பி.யில் சோகம் | ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வில் கூட்ட நெரிசல்; குழந்தைகள், பெண்கள் உட்பட 107 பேர் பலி!

Angeshwar G

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் அமைந்துள்ளது ரதி பன்பூர் எனும் கிராமம். சில செய்தி நிறுவனங்கள் முகல்கர்ஹி கிராமம் என்றும் தெரிவிக்கின்றன. இங்கு மதபோதகர் ஒருவரின் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்வு நடந்தது. இதற்காக போடப்பட்ட கூடாரத்தில் மக்கள் கூடிய நிலையில், கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி 107 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி எட்டா சிங் கூறுகையில், ”இதுவரை 23 பெண்கள், 3 குழந்தைகள், 1 நபர் என 27 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களது உடல்கள் மருத்துவமனையில் இருந்து பெறப்பட்டுள்ளன. சிறு காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு செல்லவில்லை. தொடர்ச்சியாக விசாரணை நடந்து வருகிறது” எனவும், இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணிகளும் நடந்து வருகிறது எனவும் காவல்துறை அதிகாரி தெரிவித்தார். கூட்ட நெரிசல் காரணமாகவே இத்தனை உயிரிழப்புகள் நிகழ்ந்ததாக சிக்கந்தரா ராவ் காவல்நிலைய அதிகாரியும் தெரிவித்துள்ளார். இருப்பினும், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயர்ந்து கொண்டே வருகிறது. தற்போதைய தகவலின்படி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை கூடும் என்று அஞ்சப்படுகிறது.

கூட்டத்தில் கலந்துகொண்டவர் கூறுகையில், ”மதநிகழ்வு முடிவடைந்ததும் நெரிசல் ஏற்பட்டது. ஏராளமானோர் திரண்டு இருந்த நிலையில் வெளியேற வழி இல்லை. எல்லோரும் ஒருவர் மீது ஒருவர் விழுந்த நிலையில் நெரிசல் ஏற்பட்டது. ஒரு சிலர் மயக்கமடைந்தனர். சிலர் இறந்துவிட்டனர்” என தெரிவித்தார்.

விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள உ.பி முதல்வர் உத்தரவு

உயிரிழந்தவர்களுக்கு அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் ஆறுதல் தெரிவித்தார். காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இரு காவல் உயரதிகாரிகள் தலைமையில் சம்பவத்திற்கான காரணங்களை விசாரிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

குடியரசுத்தலைவர் இரங்கல்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பல பக்தர்கள் உயிரிழந்த நிகழ்வு வேதனையைத் தருகிறது என்றும், குடும்ப உறுப்பினர்களை இழந்து வாடும் மக்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிடவும் அரசு நிர்வாகத்தைக் கேட்டுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.