video image x page
இந்தியா

உ.பி.| இருக்கையில் இருந்து வலுக்கட்டாயமாக அகற்றப்பட்ட பள்ளி முதல்வர்.. வைரலாகும் அதிர்ச்சி சம்பவம்!

Prakash J

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், பிஷப் ஜான்சன் என்கிற பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இது லக்னோ மறைமாவட்டத்தால் (வட இந்திய தேவாலயம்) நிர்வகிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இப்பள்ளியின் முதல்வர் பருல் சாலமனை, வட இந்திய தேவாலய பிஷப் மோரிஸ் எட்கர் டானின் ஆதரவாளர்கள் அவரது நாற்காலியில் இருந்து வலுக்கட்டாயமாக அகற்றியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், வழக்கறிஞர் தலைமையிலான குழு ஒன்று பருல் சாலமன் அறைக்குள் நுழைகிறது. அவர் தன்னுடைய இருக்கையில் அமர்ந்துள்ளார். அப்போது உள்ளே நுழைந்த குழுவினர், அவர் வைத்திருக்கும் செல்போனை வாங்க முயற்சிக்கின்றனர். ஆனால் பருல் சாலமனோ தர மறுக்கிறார். என்றாலும் அவரிடமிருந்து போன் பறிக்கப்படுகிறது.

மேலும் ஒருகட்டத்தில் அவரை இருக்கையில் இருந்து எழுப்ப முயல்கின்றனர். அப்போதும் அவர் எழுந்திருக்கவில்லை. இதையடுத்து அந்த இருக்கையை தள்ளிக்கொண்டு போய் சாய்த்துவிடுகின்றனர். இதனால், பருல் சாலமன் இருக்கையில் எழுகிறார்.

இதையும் படிக்க: ஒரு எருமை மாட்டுக்கு இருவர் உரிமை.. திணறிய போலீஸ்.. இறுதியில் தீர்வுகண்ட எருமை.. உ.பியில் ருசிகரம்!

அதன்பின்னர், அந்த இருக்கையில் புதிய முதல்வர் ஒருவரை உட்கார வைக்கின்றனர். அவருக்கு அங்கிருந்த குழுவினர் கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர். பின்னர், புதிய முதல்வர் எதிரில் பருல் சாலமன் நிறுத்தப்படுகிறார். அவரிடம் அந்த குழுவினர் ஏதோ கேள்வி கேட்கின்றனர். அவரும் ஏதோ பதில் சொல்கின்றனர். இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து பருல் சாலமன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பிஷப் மோரிஸ் எட்கர் டான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது அறைக்குள் நுழைந்து கொள்ளையடித்ததாகவும், மிரட்டல் விடுத்ததாகவும், தவறாக நடந்துகொண்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால், இதுகுறித்து பிஷப் மோரிஸ் எட்கர் டான் எதுவும் பதிலளிக்கவில்லை. என்றாலும், பள்ளித் தேர்வின்போது வினாத்தாள்களைக் கசியவிட்டு, பருல் சாலமன் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. அவர் பள்ளியின் முதல்வராக இருந்த காலத்தில் ரூ.2.40 கோடி ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டிருப்பதாக அந்தக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: இந்தோனேசியா| ஒரே மாதத்தில் இரண்டாவது சம்பவம்.. 36 வயது பெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு!