உயிரிழந்தவர்களின் உடல்களுடன் குடும்பத்தினர் pt web
இந்தியா

தலைமறைவான போலே பாபா... 116 ஆக அதிகரித்த உயிரிழப்புகள்... ஹத்ராசில் நிலவரம் என்ன?

PT WEB

116 ஆக அதிகரித்த உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராசில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது. பலருக்கும் தீவிர சிகிச்சைகள் தொடர்ந்தவண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் விபத்திற்குப் பின் தலைமறைவான போலே பாபாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் என்ற கிராமத்தில் போலே பாபா என்ற மத போதகரின் ஆன்மிக சொற்பொழிவு கூட்டம் நடந்தது. 300 பேர் அளவில் மட்டுமே பங்கேற்கக்கூடிய இடத்தில் ஏறத்தாழ பத்தாயிரம் பேர் வரை பங்கேற்றதாலேயே இத்தனை பயங்கரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

கூட்டம் நிறைவடைந்ததும் ஒரேநேரத்தில் ஏராளமானோர் வெளியேற முயன்றதால் நெரிசல் ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கிக் கொண்டும், மூச்சுத்திணறியும் பெண்கள், குழந்தைகள் என பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுவரை 116 பேர் உயிரிழந்த நிலையில், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைவர்கள் இரங்கல்

உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக அறிவித்துள்ளன.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் உத்தர பிரதேச தலைமை செயலாளர், காவல்துறை உயரதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அதேசமயத்தில் உத்தரபிரதேச மாநிலத்தின் தடயவியல் நிபுணர்களும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

யார் இந்த போலே பாபா?

போலே பாபா உத்தரப்பிரதேச மாநிலத்தின் காவல்துறையில் காவலராக பணியாற்றியவர் போலே பாபா. ஆனால், 1990களில் விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு, சாமியாராக மாறியிருக்கிறார். உத்தரப்பிரதேசத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் அதிக செல்வாக்கு மிக்க ஒரு சாமியாராகவே வலம்வந்து கொண்டிருந்துள்ளார்.

இவரது ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சிகள் பரவலாக அவ்வப்போது நடத்தப்படக் கூடியது. இப்படித்தான் ஹத்ராஸிலும் ஆன்மீக சொற்பொழிவுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிலும், புதிய குற்றவியல் சட்டங்களின் கீழ், இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய மத போதகர் போலே பாபாவை தேடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் பலரும் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.