video image twitter
இந்தியா

உ.பி|காய்ச்சலால் உயிரிழந்த சகோதரி; ஆம்புலன்ஸ் இல்லாததால் உடலை சுமந்தே சென்ற சகோதரர்கள்! #viralvideo

Prakash J

உத்தரப் பிரதேச மாநிலத்தில், டைபாய்டு காய்ச்சலால் மரணமடைந்த தனது சகோதரியின் உடலைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காததால், சகோதரர்களே சுமந்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 12 மாவட்டங்களில் உள்ள 633 கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தவிர, அடுத்த இரண்டு நாள்களுக்கு உத்தரப்பிரதேசத்தில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: ”மருமகள் எங்களுடன் இல்லை; NOK விதியை மாற்ற வேண்டும்” - வீரமரணம் அடைந்த கேப்டனின் பெற்றோர் கோரிக்கை!

அந்த வகையில், கனமழையால் லக்கிம்பூர் கேரி மாவட்டமும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஷிவானி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரை, உரிய நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், அவரை சகோதரர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும் அவர் உயிரிழந்துவிட்டார். மனம் உடைந்த சகோதரர்கள், தங்களது சகோதரியின் உடலை ஆம்புலன்ஸ்மூலம் கொண்டுவர முடியாத நிலையில் ஒருவர் மாற்றி ஒருவர் தோளில் சுமந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தங்களது வீட்டுக்குக் கொண்டு வந்துள்ளனர்.

தங்களது வீட்டுக்குச் செல்லும் பாதைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கிவிட்டதால் தண்டவாளம் அமைந்திருக்கும் பாதை வழியாகவே, அவரது சகோதரர்கள் ஷிவானியின் உடலை சுமந்துச் செல்கின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதுடன் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிக்க: பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைத்து வெளிநாட்டில் குடியேறும் இந்தியர்கள்; குஜராத் மாநிலத்தின் நிலை என்ன?