model image freepik
இந்தியா

உபியில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆசிரியர் குடும்பம்.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவமா? யோகி அரசு விசாரணை!

Prakash J

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி பவானி நகரில் வசித்து வந்தவர், சுனில் குமார். பள்ளி ஆசிரியரான இவருக்கு பூனம் பார்தி என்ற மனைவியும் 1 மற்றும் 6 வயதில் இரண்டு மகள்களும் இருந்தனர்.

இந்த நிலையில், இவர்கள் அனைவரும், கடந்த அக்டோபர் 3ஆம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த கொடூர சம்பவத்தில் சந்தன் வர்மா என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்துள்ளனர்.

model image

சந்தன் வர்மா, சுனில் குமார் குடும்பத்தைக் கொலை செய்து விடுவதாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே மிரட்டல் விடுத்ததாகவும், இதற்காக சுனில் குமார் வீட்டை நோட்டமிட்டு வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சுனில் குமார் குடும்பத்தைச் சுட்டுக் கொன்ற பின்னர் சந்தன் வர்மா தற்கொலை செய்து கொள்ள எண்ணியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசாரின் விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிக்க: தலைமைச் செயலகத்தின் 3-வது மாடியில் இருந்த குதித்த துணை சபாநாயகர்.. மகாராஷ்டிராவில் பரபரப்பு!

அவர்கள், “சுனில் குமாரின் மனைவியான பூனம் பார்தி, சந்தன் வர்மா தங்களை மிரட்டுவதாக இரண்டு மாதங்களுக்கு முன்பே போலீஸில் புகார் அளித்துள்ளார். அதில், எங்களது குடும்பத்திற்கு ஏதேனும் விபரீதம் நடந்தால் அதற்கு சந்தன் வர்மாதான் பொறுப்பு எனவும் கூறியுள்ளார். இந்த நிலையில்தான் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதற்குக் காரணம், கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி ரேபரேலியில் உள்ள மருத்துவமனைக்கு பூனம் பார்தி தனது கணவருடன் சென்றிருந்தார். அப்போது சந்தன் வர்மா, பூனம் பார்தியிடம் தவறாக நடந்துள்ளார். அதைத் தட்டிக் கேட்ட பூனத்தையும் அவரது கணவரையும் சந்தன் அறைந்ததாகவும், மேலும், இதுகுறித்து, போலீஸில் சொன்னால், உங்கள் குடும்பத்தைக் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாகவும் பூனம் சொன்னதன் பேரில் போலீஸில் முதல் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளனர்.

model image

தற்போது அவரைக் காவலில் எடுத்து விசாரித்து வரும் போலீஸ், சந்தன் வர்மாவின் கைப்பேசியை ஆராய்ந்துள்ளனர். அதில் பூனம் பார்தி மிரட்டல் விடுத்த தகவல்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் உ.பியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை மையப்படுத்தி எதிர்க்கட்சிகள், யோகி ஆதித்யநாத் அரசையும் விமர்சித்துள்ளன. என்றாலும், இதுதொடர்பாக விரைந்து விசாரணை நடத்துமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பியும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்துள்ளார். முன்னதாக, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இச்சம்பவம் யோகி அரசை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதையும் படிக்க: ‘இளமைக்கு போலாம் வாங்க...’ - இஸ்ரேல் Time Machine எனக்கூறி ரூ.35 கோடி மோசடி.. தலைமறைவான உ.பி. ஜோடி!