மணப்பெண் புதிய தலைமுறை
இந்தியா

இன்னும் எவ்வளவு நாள் இந்த கொடுமை! திருமணத்தை நிறுத்த மணமகன் சொன்ன காரணம்! கொந்தளித்த மணமகள்!

Jayashree A

உத்திரபிரதேசம் முசாஃபர் நகரில் நேற்று நடக்கவிருந்த ஒரு திருமணத்தில் ஹுண்டாய் க்ரெட்டா காருக்கு பதிலாக மாருதி வேகன் காரை மணமகளின் குடும்பத்தினர் வரதட்சணையாக கொடுத்ததால் மணமகன் திருமணத்தை நிறுத்திய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்திரபிரதேசம் முசாஃபர் நகரில், அமீர் ஆலம் என்பவருக்கும் ஒரு பெண்ணிற்கும் நேற்று திருமணம் நடைப்பெற இருந்த நிலையில் சடங்குகள் நடந்துக்கொண்டிருந்தது. சடங்குகளில் ஒன்றாக மணமகன், மணமகளின் வீட்டிற்கு வரும் நிகழ்ச்சிக்காக மணகள் வீட்டார், காத்திருந்தனர். ஆனால் நேரம் கடந்தும், மணமகன் வரவில்லை. இறுதியில் மணமகன் திருமணத்தை நிறுத்தி விட்டதாக அறிந்தநிலையில் மணமகளும், குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

திருமணம் நிறுத்தப்பட்டதற்கான காரணம் குறித்து கேட்டதற்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. மணமகன் சீதனமாக, பெண்ணின் தாயாரிடம் ஹுண்டாய் க்ரெட்டா கார் பரிசாக கேட்டதாகவும், ஆனால் அவர்கள் மாருதி வேகன் பரிசாக கொடுத்ததால், அதிருப்தி அடைந்த மணமகன் திருமணத்தை நிறுத்தியதாக தெரியவந்ததை அடுத்து பெண்ணின் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் தனது திருமணம் பாதியில் நின்றதைஅறிந்து துயரடைந்த மணப்பெண் தனது நிலை குறித்தும், தனது குடும்பம் பாதிக்கப்பட்டது குறித்தும், இப்படிப்பட்ட ஆண்களை கடுமையாக தண்டிக்கவேண்டும் என்றும், கவலையுடன் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்த வீடியோவானது தற்பொழுது வைரலாகி வருகிறது.

இந்நிலையில் மணப்பெண் வீட்டார் புகாரின் அடிப்படையில் வழக்கைப்பதிவு செய்த போலிசார், தப்பிச்சென்ற மணமகனை தேடிவருகின்றனர்.