இந்தியா

போலீஸ்விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 19வயது இளைஞர் உயிரிழப்பு; உறவினர்கள் போராட்டம்..!

webteam

உத்திரப்பிரதேசத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 19வயது இளைஞர் காவல் நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. போலீசாரால் கொடுமைப்படுத்தப்பட்டு அவர் உயிரிழந்ததாக போராட்டம் வெடித்துள்ளது.

மோகித் (19) என்ற இளைஞரை மோட்டார் சைக்கிளை திருடியதாக உத்திரப்பிரதேசத்தின் லால்காஞ்ச் போலீசார் கைது செய்துள்ளனர். அவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். ஏற்கெனவே மோட்டார் சைக்கிளை திருடியதாக 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மோகித்தும் கைதாகியுள்ளார். ஆனால் காவல்நிலையத்தில் மோகித் உயிரிழந்துள்ளார்.

போலீசாரின் தாக்குதல் காரணமாகவே மோகித் உயிரிழந்ததாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தெரிவித்துள்ள மோஹித்தின் சகோதரர், போலீசார் என்னுடைய சகோதரனை அழைத்துச் சென்றனர். சாவி எங்கே என அவனை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர், என தெரிவித்துள்ளார்.

இது குறித்து தெரிவித்துள்ள மோகித் தாக்குதல் குற்றச்சாட்டை போலீசார் மறுத்துள்ளனர். அவர் மருத்துவமனையில் தான் இறந்தார். அவருக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் இருந்தன என தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தெரிவித்துள்ள போலீஸ் உயர் அதிகாரி, சனிக்கிழமை மாலை வயிறு வலி என தெரிவித்தார். அவரை மருத்துவமனை அழைத்துச் சென்றோம். மீண்டும் ஞாயிற்றுக்கிழமை சோர்வடைந்தார், அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அவர் நிமோனியாவால் பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் உடம்பில் காயங்கள் இல்லை. காலை 11 மணிக்கு இறந்தார். அவர் உடற்கூறாய்வு முடிந்துள்ளது. அவரது குடும்பத்தினர் போலீஸ் அதிகாரிகள் இருவர் மீது புகார் அளித்துள்ளனர். விசாரணை நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார்.