இந்தியா

கோவிஷீல்டு ஏற்றுமதி தற்காலிக நிறுத்தம்: உள்நாட்டு தேவை உயர்வால் மத்திய அரசு முடிவு

Sinekadhara

கொரோனாவுக்கான கோவிஷீல்டு தடுப்பு மருந்து ஏற்றுமதியை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்தியாவில் கொரோனா 2ஆவது அலை உருவாகியுள்ள சூழலில் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தடுப்பூசிகளுக்கான உள்நாட்டு தேவை வெகுவாக அதிகரிக்கும் என்பதால் கோவிஷீல்டு தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. மேலும், அதிகரிக்கும் தடுப்பூசி தேவையை சமாளிக்கும் வகையில் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணைக்கிடையிலான இடைவெளியை மத்திய அரசு அண்மையில் 4 வாரத்திலிருந்து 6 வாரமாக உயர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நடவடிக்கைகள் தவிர கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளின் உற்பத்தியை அதிகரிக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிரேசில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதுவரை இந்தியாவில் சுமார் ஐந்தரை கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வரும் ஜூலை மாதத்திற்குள் 30 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி முடிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.