காரில் மாட்டிக்கொண்ட குழந்தை google
இந்தியா

கேரளா: ரிமோட் சாவியுடன் காரினுள் மாட்டிக்கொண்ட குழந்தை; ஒரு மணிநேரம் பரிதவித்த குடும்பத்தினர்

Jayashree A

வீட்டில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருந்தால், வீட்டில் இருக்கும் பெரியவர்கள் மற்றும் பெற்றோர்கள் குழந்தைகளை மிகவும் கவனத்துடன் வளர்க்க வேண்டியது அவசியமாக இருக்கிறது.

குழந்தைகள் ஆபத்தை உணராமல் நெருப்பு, நீரில் விளையாடுவதுடன், கைகளில் கிடைக்கும் பொருட்களை வாயில் போட்டுக்கொள்வது போன்ற விபரீத செயல்களில் ஈடுபடுவார்கள். அதனால், பெற்றோர்களும் பெரியவர்களும் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியுள்ளது.

சமீபத்தில் திருவனந்தபுரத்தில் ஒரு குழந்தை காருக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டது. ஒரு மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு துறையினரின் உதவியுடன், குடும்பத்தினர் குழந்தையை காப்பாற்றினர். இதனால் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. இதன் வீடியோ வைரலாகி வரும் நிலையில், இச்சம்பவம் எங்கு எப்பொழுது நடந்தது என்பதை பார்க்கலாம்.

திருவனந்தபுரத்தின் அருகில் இருக்கும் வெங்கனூரை சேர்ந்தவர் நந்து. இவரின் இரண்டு வயது மகன் ஆரவ். நந்து புதியதாக கார் ஒன்றை வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதில் ரிமோட் கார் சாவியுடன் காருக்குள் நுழைந்து கதவை பூட்டிக்கொண்டுள்ளார் அவரின் குழந்தை. இதை கண்ட குடும்பத்தினர், டூப்ளிகேட் சாவியை தேடியுள்ளனர்.

ஆனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காரின் டூப்ளிகேட் சாவி கிடைக்காததால், குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படலாம் என்பதால், உடனே தீயணைப்பு துறையினரை உதவிக்கு அழைத்துள்ளனர். விரைவாக அங்கு வந்த தீயணைப்பு துறையினர், காரைத் திறந்து குழந்தையை பத்திரமாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாக குழந்தைக்கு ஏதும் அசம்பாவிதம் நேரவில்லை. இதே திருவனந்தபுரத்தில் கடந்த மாதம் காருக்குள் சிக்கி இரண்டு வயது சிறுவன் மூச்சுத் திணறி பலியான சம்பவம் நினைவுக்கு வரலாம்.