பெண் சிசுக்கொலை கோப்புப்படம்
இந்தியா

டெல்லி | இரட்டை பெண் குழந்தைகள் பிறந்ததால், தந்தை குடும்பமே கொன்ற கொடூரம்!

டெல்லியில் குடும்ப உறுப்பினர்களே பெண் இரட்டையர்களை கொன்று புதைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

பிறந்தது பெண் சிசு என்று தெரிந்தால் அதை கொல்லும் காலத்தை கடந்து வந்துவிட்டோம் என்றுதானே நீங்களும் நினைத்து வந்தீர்கள்...? அது உண்மையல்ல என்று நம் எல்லோரிடமும் சொல்லியிருக்கிறது நம் நாட்டின் தலைநகரில் நடந்த ஒரு சம்பவம். சம்பவத்தின்படி, டெல்லியில் குடும்ப உறுப்பினர்களே பெண் இரட்டையர்களை கொன்று புதைத்துள்ளனர். நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கை சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 2022 ஆம் ஆண்டு டெல்லியின் பூத் காலனை பகுதியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துள்ளார்.

திருமணம்

திருமணம் செய்த சில நாட்களிலேயே அப்பெண்ணின் கணவரின் குடும்பம் வரதட்சனை கேட்டு, இவரை தொடர்ந்து துன்புறுத்தியுள்ளனர். மேலும் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளனர்.

சிறிது காலத்திற்கு பிறகு இப்பெண்னும் கருவுறவே, இப்பெண்ணின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினம் என்ன என்று அறிய பாலின பரிசோதனை செய்யுமாறு குடும்பத்தார் இவரை கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆனால், பின்விளைவுகளை எண்ணி இவர் அதை செய்து கொள்ள மறுத்துள்ளார். இந்நிலையில், பிரசவமடைந்த இப்பெண்னுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. இதனை அறிந்த அப்பெண்ணின் கணவரும், அவரது வீட்டாரும் குழந்தைகளுக்கு நல்ல சிகிச்சை அளிப்பதாக கூறி, பெண்ணிடமிருந்து குழந்தைகளை வாங்கி சென்றுள்ளனர்.

இதன் பிறகு, குழந்தைகள் எங்கே என்று அப்பெண் கேட்கவே, உடல்நலம் சரியில்லாமல் இருவரும் இறந்துவிட்டதாக பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சந்தேகமடைந்த அத்தாய், தன் குடும்பத்தினர் உதவியோடு போலீசாரை அணுகி நடந்ததை கூறியுள்ளார்.

இதனை அடுத்து தொடர் விசாரணை நடத்திய போலீசார், சப்டிவிஷனல் மாஜிஸ்திரேட்டை அணுகி புதைக்கப்பட்ட குழந்தைகளின் உடலை மீண்டும் தோண்டி எடுக்கும் உத்தரவை பெற்றுள்ளனர்.

பிறகு பெண் சிசுக்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ததில், இரட்டை பெண் குழந்தைகளை குடும்ப உறுப்பினர்களே பெண் சிசுக்கொலை செய்து புதைத்தது தெரியவந்துள்ளது. இந்த பெண் சிசுக்கொலை விவகாரம், நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.