இந்தியா

டி.வி.தொகுப்பாளினி மரணத்தில் திருப்பம்: ஆண் தொகுப்பாளர் கைது!

webteam

டி.வி.தொகுப்பாளினி மாடியில் இருந்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்ட வழக்கில் அவருடன் பணியாற்றிய ஆண் தொகுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் ராதிகா கவுசிக். வயது 25. இவர், உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் தங்கியிருந்து, செய்தி சேனல் ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். இவர் தங்கியிருந்த குடியிருப்பின் பால்கனியில் இருந்து கீழே விழுந்து கடந்த சில நாட்களுக்கு முன் மரணம் அடைந்தார். அவர் தள்ளிவிடப்பட்டு கொல்லப்பட்டாரா? அல்லது தவறி விழுந்து இறந்தாரா? என்பது பற்றி போலீசார் விசாரித்து வந்தனர். 

ராதிகா மாடியில் இருந்து விழும்போது அவருடன் பணியாற்றும் ஆண் தொகுப்பாளர் ராகுல் அஸ்வாதி என்பவர் உடன் இருந்துள்ளார். அவரி டம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ’’ராதிகா மது அருந்தியிருந்தார். போதையில் தடுமாறி கீழே விழுந்துவிட்டார். அப்போது வாஷ்ரூம் சென்றிருந்ததால் நான் அங்கு இல்லை’’ என்றார். ஆனால், அந்த அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி, இருவரும் பேசிக்கொண் டிருந்ததை பார்த்ததாகவும் அப்போது திடீரென்று ராதிகா மாடியில் விழுந்ததாகவும் தெரிவித்தார். 

ராதிகாவின் பெற்றோரும் “ ராகுல்தான் அவரை தள்ளிவிட்டு கொலை செய்திருக்கலாம். எங்கள் மகளுக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை. இறப்பதற்கு முந்தைய நாளில் கூட எங்களுடன் நன்றாக தொலைபேசியில் பேசினார்” எனத் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் ராகுலிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சொன்னது முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரிடம் மேலும் விசாரணை நடந்துவருகிறது.