இந்தியா

முத்தலாக் முறைக்கு எதிராக மத்திய அரசு சட்ட வரைவு

webteam

முத்தலாக் முறையைத் தடுக்க வகை செய்யும் சட்ட வரைவை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. 

முத்தலாக் முறைக்கு எதிராக தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை அளித்தது. அந்தத் தீர்ப்பில் 3 நீதிபதிகள் முத்தலாக் முறை சட்டவிரோதமானது என்று தெரிவித்தனர். இருப்பினும் இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என தெரிவித்த நீதிபதிகள், முத்தலாக் முறைக்கு 6 மாத காலம் இடைக்கால தடை விதித்தனர். அதேசமயத்தில், இந்த விவகாரத்தில் நாடாளுமன்றம் அனைத்துக் கட்சிகளுடன் கலந்தாலோசித்து முடிவு எடுத்துக் கொள்ளலாம் எனவும் உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து முத்தலாக் நடைமுறையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இந்நிலையில் முத்தலாக் முறையை பின்பற்றி விவாகரத்து செய்பவர்கள் மீது 3 ஆண்டு சிறை தண்டனை விதிப்பது தொடர்பான சட்ட வரைவை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.