இந்தியா

காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரை ! கேரளாவை கலக்கிய ஐயப்ப ஜோதி

webteam

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலின் சடங்குகள், மரபுகள் ஆகியவற்றை பாதுகாக்க கோரி காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரை பெண்களும், ஐயப்ப பக்தர்களும், நடிகர்களும் கைகளில் விளக்குகளை வைத்து சாலையோரங்களில் நின்றனர்.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பை அடுத்து சில பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்றனர். பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக அவர்கள் உள்ளே நுழைய முடியாமல் திரும்பிவிட்டனர். சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் நுழைவதற்கு கேரள பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

அவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியதோடு, கேரள சட்டசபையையும் முடக்கி வருகின்றனர். இதனிடையே சபரிமலை கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதனால் சிரமங்களை அனுபவிக்க நேர்வதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். ஆனாலும் தொடர்ந்து சில பெண்கள் சபரிமலைக்கு நுழைய முயன்று வருகின்றனர்.

இந்நிலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி சபரிமலை கோயிலின் நடை திறக்கப்பட்டது. கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் பெற்றப்போதிலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி சபரிமலை கோவிலுக்கு சென்ற பெண்கள் பலர் போராட்டக்காரர்களால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். பக்தர்கள் போராட்டம் காரணமாக அங்கு அவ்வப்போது பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் நடப்பு ஆண்டின் மண்டல பூஜை இன்று இரவு 10 மணிக்கு நடைபெறவுள்ளது. மண்டல பூஜைக்கு பின்னர் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. அதனைதொடர்ந்து ஜனவரி 14ஆம் தேதி நடைபெறும் மகரவிளக்கு பூஜைக்காக வரும் டிசம்பர் 30ஆம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படவுள்ளது. சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலின் புனிதம் காக்கப்பட வேண்டும் என்றும் மரபுகளை பாதுகாக்கவும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஜோதி ஏற்றுவதற்கு சபரிமலை கர்ம சமிதி அமைப்பு புதன்கிழமை ஏற்பாடு செய்திருந்தது.

இதற்கு பாஜக உள்பட பல்வேறு வலதுசாரி அமைப்புகளும், பந்தளம் அரச குடும்பமும், நாயர் சமூகமும் ஜோதி ஏற்றுவதற்கு ஆதரவு தெரிவித்தன. மேலும் ட்விட்டரில் "ஐயப்ப ஜோதி" என்ற ஹாஷ்டேகும் ட்ரெண்டானது அதன்படி, காசர்கோடு மாவட்டத்தின் ஹோசங்கடி பகுதியிலிருந்து கன்னியாகுமரி அருகே உள்ள திரிவேணி வரை பெண்கள், குழந்தைகள் என பலதரப்பு மக்களும் ஜோதி ஏற்றினர்.

மலையாள நடிகரும், பாஜக எம்.பி.யுமான சுரேஷ் கோபி, முன்னாள் காவல் துறை டிஜிபி டி.பி. சென்குமார் ஆகியோரும் இதில் பங்கேற்றனர். காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரை மாலை 6 மணி முதல் 6.30 மணி பிரார்த்தனை நடைபெற்றது. அகல் விளக்குகளை வீட்டு வாசலில் பல குடும்பத்தினர் ஏற்றி வைத்தனர். மேலும் இதற்கு ஆதரவு தெரிவித்து தெலங்கானா மாநிலத்தில் உள்ள சில்கூர் பாலாஜி கோயிலிலும் ஐயப்ப ஜோதிக்கு ஆதரவு தெரிவித்து விளக்குகள் ஏற்றப்பட்டது.