தமிழக மீனவர்கள் முகநூல்
இந்தியா

இலங்கை சிறைத்துறை அட்டூழியம்! மொட்டை அடித்து; கழிவறை சுத்தம் செய்ய வற்புறுத்தப்பட்ட தமிழக மீனவர்கள்!

PT WEB

செய்தியாளர்: ஆனந்தன்

இதுநாள் வரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது நடவடிக்கை, படகுகளை பறிமுதல் செய்தல் போன்ற நடவடிக்கைகளை எதிர்கொண்ட தமிழக மீனவர்கள், தற்போது மொட்டை அடித்தல், கழிவறைகளை சுத்தம் செய்தல் போன்ற துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைதான ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் ஊர் திரும்பிய நிலையிலும் அவர்களை கண்டு உறவினர்கள் கதறி அழுதனர். மீனவர்களுக்கு மொட்டை அடிக்கப்பட்டு இருந்ததே இதற்கு காரணம்.

இலங்கை கடற்படையினரால் கைதான மீனவர்கள் கணேசன், சேசு, அடைக்கலம் ஆகிய 3 மீனவர்கள் எல்லை தாண்டியதாக இரண்டாவது முறையாக கைதாகி 6 மாத சிறை, தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் சிறையில் அடைக்கப்பட்டனர். அபராதத் தொகை செலுத்தவில்லை எனக் கூறி, இலங்கை சிறைத்துறை போலீசார் தமிழக மீனவர்களுக்கு மொட்டை அடித்தும், சிங்கள கைதிகள் பயன்படுத்திய கழிவறையை சுத்தம் செய்ய வைத்தும் துன்புறுத்தியுள்ளனர்.

சொந்த ஊர் திரும்பிய மீனவர்கள் இதனை வேதனையுடன் தெரிவித்தனர். மகனுக்கு மொட்டை அடிக்கப்பட்டதை எண்ணி கண்ணீருடன் பேட்டியளித்த மீனவரின் தாயார், இலங்கை சிறையில் உள்ள தனது மற்றொரு மகனை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதனிடையே, மீனவர்களுக்கு நேர்ந்த கொடுமைகளை எண்ணி அவர்களது குடும்பத்தினர் கதறி அழுதனர். இலங்கை அரசின் தொடர் அத்துமீறல், மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி ராமேஸ்வரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர் சங்கத் தலைவர் எமரிட் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, ”இலங்கை சிறையில் தமிழக மீனவர்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும்.” என தெரிவித்தார். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் என்றும் அவர் விளக்கம் அளித்தார். தங்களது வாழ்வாதாரம் காக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தமிழக மீனவர்களின் முதன்மையாக கோரிக்கையாக உள்ளது.