இந்தியா

மக்களின் வாழ்வில் ஒளியேற்றிய மாவட்ட ஆட்சியரின் பெயரையே கிராமத்திற்கு சூட்டிய மக்கள்..!

PT

தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஆதிலாபாத் மாவட்டத்தில் வசித்து வந்த பழங்குடியினரின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதற்காக அப்பகுதியில் உள்ள மக்கள் கிராமத்திற்கு திவ்யாவின் பெயரை சூட்டியுள்ளனர்.

2017-ஆம் ஆண்டு, தெலங்கானாவின் ஆதிலாபாத் மாவட்டத்தில் பழங்குடியினருக்கு இடையே நடைபெற்ற வன்முறைக்கு நடுவே அம்மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியராக பணியமர்த்தப்படுகிறார் திவ்யா தேவராஜன். அவர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றபோது திவ்யா மீது மக்களுக்கு எவ்வித நம்பிக்கையும் வரவில்லை. அப்போதே இந்தப் பிரச்னையை மிக நுண்ணிப்பாக கையாள வேண்டும் என்று முடிவெடுத்த திவ்யா, அப்பகுதி பழங்குடியினரின் மொழியான கோண்டியை கற்க ஆரம்பித்தார். மூன்றே மாதங்களில் கோண்டி மொழியை நன்றாகக் கற்றுத்தேர்ந்த திவ்யா தனது சொற்பொழிவுகள் மூலம் மக்களிடையே மாற்றத்தைக் கொண்டு வர முயன்றார்.


மக்களின் மொழியிலேயே அதிகாரி பேசியதால் அவரிடம் மக்கள் தங்களது இதயக் குமுறல்களை கூற ஆரம்பித்தனர். அடுத்த மூன்று மாதங்களில் திவ்யாவுடனான பஞ்சாயத்து சந்திப்புகள் மிக அமைதியாக நடந்தன. அடுத்தக்கட்ட முயற்சியாக மக்களின் கோரிக்கைகளை சரிவர நிறைவேற்ற, கோண்டி மொழியை கற்றுத்தேர்ந்த அதிகாரிகளை மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் பணியமர்த்தினார். இதன் மூலம் ஆதிலாபாத் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் தங்கு தடையின்றி கிடைத்தன.

அதன் பின்னர் அப்பகுதி மக்களின் வேலையின்மை, சுகாதார பிரச்னைகள் உள்ளிட்ட பலவற்றில் கவனம் செலுத்திய திவ்யா அவ்வனைத்தையும் சரிசெய்தார். இதன் மூலம் ஆதிலாபாத் மாவட்ட ஆட்சியராக இருந்த திவ்யா அப்பகுதி மக்களின் குடும்பத்தில் ஒருவராக மாறினார். சொற்பொழிவுகள் மூலமாகவும் சீரிய நடவடிக்கைகள் மூலம் அப்பகுதி மக்களிடையே மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய திவ்யாவின் பெயரை அப்பகுதி மக்கள் ஒரு கிராமத்திற்கு சூட்டியுள்ளனர்.

இது குறித்து ஆதிலாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமூக அமைப்பின் தலைவர் மாருதி என்பவர் கூறும் போது “ ஆதிலாபாத் மாவட்டத்திற்கு எத்தனையோ மாவட்ட ஆட்சியர்கள் வந்துள்ளனர். ஆனால் நான் முதன் முறையாக அலுவலகம் ஏறி சந்தித்த மாவட்ட ஆட்சியர் திவ்யா மட்டும்தான்.அவருக்கு எங்கள் பகுதியில் உள்ள எல்லாம் மக்களின் பெயர்களும் தெரியும். அந்த அளவுக்கு அவர் எங்களுடன் இணக்கமாக இருந்தார்.”என்றார்.

இது குறித்து திவ்யா கூறும் போது “ அப்பகுதி மக்கள் தங்களிடம் யாராவது பேசமாட்டார்களா என்ற ஏக்கத்தில் இருந்தனர். அவர்களது மொழியிலேயே நான் பேச ஆரம்பித்த போது, அவர்கள் என்னிடம் அவர்களது பிரச்னைகளை மிக இயலாபாக சொல்ல ஆரம்பித்தனர். நான் அவர்களுடன் தொடர்பு கொள்ள நினைத்தேன். அதற்காக தினமும் பணிகளை நிறைவு செய்த பின்னர் ஆல் இந்தியா ரேடியோவில் மூத்த அறிவிப்பாளராக இருந்த துர்வா பூமன்னாவுடன் உரையாடுவேன்.”என்றார்.

தற்போது பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் செயலர் மற்றும் ஆணையராக பணியாற்றி வரும் திவ்யா “ நான் அந்தப் பகுதியில் இருந்திருந்தால் என் பெயரை கிராமத்திற்கு வைப்பதை தடுத்திருப்பேன் என்றும் மக்களின் பிரச்னைகளுக்கு நாம் தீர்வு காணும் முன்னர் அவர்களின் பிரச்னைகளை அவர்களது இடத்தில் இருந்து புரிந்து கொள்ள வேண்டும்” என்றும் கூறினார்.

courtesy: Better india