அமைச்சர் ராஜ்நாத் சிங் pt web
இந்தியா

“அரசியலமைப்பு சட்டத்தில் மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு கிடையாது”- மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

PT WEB

நாட்டில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக பரபரப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு தேர்தலின் போதும் ஒவ்வொரு விவகாரம் பேசுபொருளாக இருப்பது போல், நடப்பு தேர்தலில் இட ஒதுக்கீடு விவகாரம் முன்னிலையில் உள்ளது. இடஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிரஸ், பாஜக என இரு கட்சிகளும் ஒருவர் மாற்றி ஒருவர் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றன. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசமைப்பு சாசனமே இல்லாமல் ஆகிவிடும் என்றும், இடஒதுக்கீடுகளை பாஜக இல்லாமல் ஆக்கிவிடும் என இந்தியா கூட்டணி தலைவர்கள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ANI செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்திருந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், “அரசியல் சாசனத்தில் அதிக திருத்தங்களை செய்ததே காங்கிரஸ் கட்சிதான். காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போதுதான் அதிகமான திருத்தங்கள் செய்யப்பட்டன. பிரதமர் நரேந்திரமோடி ஏற்கனவே இடஒதுக்கீடு ரத்து செய்யப்படமாட்டாது; இப்போது உள்ளபடியே தொடரும் என தெரிவித்துள்ளார். இடஒதுக்கீடு என்பது ஜாதி அடிப்படையில் அளிக்கப்படுகிறது. மத அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்க அரசியல் சாசனத்தில் இடமில்லை. ஆகவே, அத்தகைய இடஒதுக்கீட்டை மட்டுமே பாஜக எதிர்க்கிறது.

கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களுக்கும் பங்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே மதரீதியாக இடஒதுக்கீடு வழங்கப்படுவது சரியில்லை என பாஜக கூறுவதை எதிர்க்கட்சிகள் திரித்து, பிரதமர் மோடி இடஒதுக்கீட்டையே ரத்து செய்துவிடுவார் என்று கூறுவதும் அரசியல் சாசனத்தையே இல்லாமல் செய்துவிடுவார் என்றும் குற்றம் சுமத்தி வருகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.