ரயில் பயணி புதியதலைமுறை
இந்தியா

’இப்படியொரு வசதியா!’.. விரைவு ரயிலின் ஏசி பெட்டியில் அருவி போல் கொட்டிய நீர்! வீடியோ

Jayashree A

மழைக்காலத்தில் அரசுப் பேருந்துகளில் மழைநீர் உள்ளே அருவி மாதிரி கொட்டி பார்த்து இருக்கிறோம். அதை வைத்து பல மீம்ஸ் கூட வைரலாகி இருக்கும். பேருந்துக்கு போட்டியாக விரைவு ரயிலின் ஏசி பெட்டியில் தண்ணீரானது அருவி போன்று கொட்டியுள்ளது. அதை வீடியோ எடுத்த ஒருவர் வலைதளங்களில் பதிவு செய்திருக்கிறார். இந்த வீடியோவானது தற்பொழுது வைரலாகி வருகிறது.

ஜபல்பூர் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரிலிருந்து டெல்லிக்கு சென்றுக்கொண்டிருந்த போது M-3 ஏசி கோச்சில் தண்ணீரானது அருவி போன்று கொட்டியுள்ளது. அதில் நனைந்தபடி பயணி ஒருவர் படுத்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மீது காங்கிரஸ் கட்சியினர், ’ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு பிரயாணத்தின் போது நீர்வீழ்ச்சி வசதியையும் சேர்த்து வழங்கி இருக்கிறீர்கள்’ என்று கிண்டல் செய்தனர்.

ஏற்கனவே ரயிலில் சரியான பராமரிப்பு இல்லாமல் இருக்கைகளும், தண்ணீர் தட்டுப்பாட்டுடன் டாய்லெட் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில், தற்பொழுது மேற்கூரையும் ஒழுகுவதாக புகார் வந்துள்ளது இரயில்வே துறையின் மீது பொதுமக்களுக்கு இருக்கும் அதிருப்தியை அதிகரித்துள்ளது.