இந்தியா

புதுச்சேரி: விஜய்சேதுபதி ரசிகர் மன்ற தலைவரை வெட்டிக் கொன்ற கும்பல்.!

kaleelrahman

புதுச்சேரியில் விஜய்சேதுபதி ரசிகர் மன்ற தலைவரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதுச்சேரியில் விஜய்சேதுபதி ரசிகர் மன்றத்தின் தலைவர் மணிகண்டன். இவர் இரவு தனது இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார் அப்போது பின் தொடர்ந்து வந்த 4பேர் கொண்ட மர்ம கும்பல் நெல்லித்தோப்பு பகுதியில் மணிகண்டனை வழிமறித்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர்.


இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த மணிகண்டனை மீட்டு காவல்துறை வாகனத்தில் கொண்டு சென்று அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே மணிகண்டன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

 இதனை தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த உருளையன்பேட்டை போலீசார் கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட மணிகண்டன் மீது ஏற்கனவே மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது