இந்தியா

பனாமா பேப்பர்ஸ் விவகாரம் - ஐஸ்வர்யா ராய்க்கு சம்மன்

கலிலுல்லா

பனாமா பேப்பர்ஸ் விவகாரம் தொடர்பாக நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பனாமா நாட்டைச் சேர்ந்த மொசாக் பொன்சேகாவின் என்ற சட்ட நிறுவனத்தின் ரகசிய ஆவணங்கள் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பொன்சேகா நிறுவனத்தை பொறுத்தவரை, கணக்கில் வராத சொத்துகளை வாங்கி குவிப்பதற்கும், வரிஏய்ப்பு செய்வதற்கும் உதவி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில், 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் சொத்துகளைக் குவித்திருப்பது தெரிய வந்தது.

1கோடிக்கும் அதிகமான ஆவணங்கள் வெளியாகி உலகம் முழுவதும் அதிர்வை ஏற்படுத்தின. இந்த ஆவணங்கள் அடிப்படையில் அந்தந்த நாடுகளில் இருக்கும் விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. அந்த வகையில், இந்தியாவில் அமலாக்கத்துறை, பனாமா பேப்பர்ஸ் அடிப்படையில் சந்தேகப்படும் நபர்களுக்கு சம்மன் அனுப்பி, நேரில் வரவழைத்து விசாரணை நடத்துகிறது. இதன் ஒருபகுதியாக பனாமா பேப்பர்ஸ் வழக்கில், நடிகை ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.