மூன்று குழந்தைகள் மரணம் pt web
இந்தியா

ட்ரங்க் பெட்டிக்குள் இருந்த 3 குழந்தைகளின் சடலங்கள்

Angeshwar G

பஞ்சாப் ஜலந்தர் நகருக்கு அருகே கிராமமொன்றில் ட்ரங்க் பெட்டியில் 4 முதல் 9 வயதுடைய 3 சகோதரிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலை முடிந்து வீடு திரும்பியபோது அவர்களைக் காணவில்லை என ஞாயிறு மாலை குழந்தைகளின் பெற்றோர் மக்சூடன் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். 8.15 மணிக்கு பெற்றோர் குழந்தைகளை தேடத்துவங்கியதாகவும் 11 மணியளவில் புகார் பதியப்பட்டுள்ளதாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், புலம்பெயர் தொழிலாளியான அவருக்கு 5 குழந்தைகள் இருப்பதாகவும் அதில் 4,7,9 வயதுடைய பெண் குழந்தைகள் உயிரிழந்திருப்பதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அக்கம்பக்கத்தினர் வீட்டில் இருந்த ட்ரங்க் பெட்டியை திறந்து பார்த்தபோது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இறப்புக்கான காரணங்களைக் கண்டறிய குழந்தைகளின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. தொழிலாளி தங்கி இருந்த வீட்டின் உரிமையாளர், தொழிலாளியின் குடிப்பழக்கத்தின் காரணமாக அவரை வீட்டை காலி செய்ய சொல்லியுள்ளார் என்பதையும் தெரிவித்தனர்.

மேலும் தந்தையே இந்த கொலைச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என் காவல்துறையினர் சந்தேகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கணவன் மனைவியை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும், தொடர்ச்சியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.