இந்தியா

கோயிலில் பக்தி பாடல்களை பாடாமல் வேறு எங்கு பாடுவது ? கைதான ஐயப்ப பக்தர்கள் கேள்வி

webteam

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் சுவாமி பாடல்களை பாடிய பக்தர்களை கேரள போலீஸார் நேற்று இரவு கைது
செய்தனர். கேரள போலீஸார் பக்தர்களை கைது செய்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தச்
சம்பவத்தையடுத்து கேரளாவில் மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளது.

கேரளாவில் பிரசித்திப் பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலின் நடை கடந்த 16 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மண்டலப்
பூஜைக்காக திறக்கப்பட்டது. மண்டலப் பூஜைக்காக திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை டிசம்பர் மாதம் 27 ஆம்
தேதி  சாத்தப்பட்டு மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30 ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படும்.
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் காரணமாக ஏராளமான பிரச்சனைகளை சபரிமலை கோயில் இப்போது சந்தித்து வருகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வழிபட அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் எனக் கூறி
உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து கடந்த மாதம் தொடக்கத்தில் பெண்கள்
சிலர் சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டபோது வருகை தந்தனர். அவர்களை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள் பலர்
போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தினர். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து ஆயிக்கணக்கானோர் சபரிமலையில் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட
மனுக்களை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அவற்றின் மீது ஜனவரி 22ஆம் தேதி விசாரணை நடைபெறும் என
உச்சநீதிமன்றம்  கூறியது. மேலும் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்றும் தெரிவித்துவிட்டது. இந்நிலையில்
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பை நடைமுறைப்படுத்த கால அவகாசம் அளிக்குமாறு உச்சநீதிமன்றத்தை
திருவாங்கூர் தேவஸம் போர்டு அணுக உள்ளதாக அதன் தலைவர் பத்மகுமார் தெரிவித்தார்.

ஆனாலும், சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் தீர்ப்புக்கு எதிராக போராடும், பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டமும் போராட்டமும் நடைபெற்று வருகிறது. நிலக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 144
தடை உத்தரவும் இருக்கிறது. இந்நிலையில் நேற்று இரவு சன்னிதானத்தில் பக்தி பாடல்களை ஐயப்ப பக்தர்கள் 70 பேரை
போலீஸார் கைது செய்துள்ளனர். 

இது குறித்து போலீஸார் கூறுகையில் "போலீசார் பக்தர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. சன்னிதானம் பகுதியில் 144 தடை
அமலில் உள்ள நிலையில் அவர்கள் அங்கு தங்க முற்பட்டனர். இதனால் வேறு வழியின்றி அவர்களை கைது செய்தோம்.
ஹரிவராசனம் பாடப்ப ட்ட பிறகு அங்கிருந்து கலைந்து செல்லும்படி கூறினோம். ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர். பக்தர்கள்
அவர்கள் விருப்பம் போல் வழிபாடு நடத்தி விட்டு செல்லலாம். அதே சமயம் விதிகளை மீறக் கூடாது. வன்முறை சம்பவங்கள்
ஏதும் நிகழாமல் இருக்கவே 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்றார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கைது செய்யப்பட்ட பக்தர் ராஜேஷ் கூறுகையில் " சுவாமியின் சன்னிதானத்தில்
பாடல்களை பாடாமல் காவல் நிலையித்திலா பாட முடியும் ? கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் பக்தர்கள்
லட்சக்கணக்கில் வருவார்கள், சன்னிதானத்தில் தங்குவார்கள் என்று தெரிந்தும் 144 தடை உத்தரவு அவசியம்தானா ? ஆயிரக்
கணக்கானோர் கூடும் சரண கோஷங்கள் எழும்பும் இடம் இப்போது வெறிச்சோடி இருப்பதை காண மனதுக்கு வருத்தமாக
இருக்கிறது" என்றார் அவர்.