இந்தியா

தூக்கத்தை கெடுத்ததால் 2ஆம் வகுப்பு மாணவன் கையை உடைத்த ஆசிரியர்!

webteam

உத்தரப்பிரதேசத்தில் வகுப்பில் தூங்கும் போது தொந்தரவு செய்த 2ஆம் வகுப்பு மாணவர் கையை ஆசிரியர் உடைத்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தை சேர்ந்த 7 வயது சிறுவன் அபய். பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் தூங்கிக் கொண்டிருந்ததால், 2ஆம் வகுப்பு படித்து வரும் சிறுவன் சக மாணவர்களுடன் பேசிக்கொண்டிந்தார். இந்த நேரத்தில் மாணவர்கள் சிலர் எழுந்து நின்று விளையாடியுள்ளனர். இதனால் ஏற்ப்பட்ட சத்தத்தில் ஆசிரியர் தூக்கத்திலிருந்து எழுந்துள்ளார். 

இதையடுத்து ஆத்திரமடைந்த அந்த ஆசிரியர், விளையாடிக் கொண்டிருந்தவர்களின் அருகில் நின்றுகொண்டிருந்த மாணவர் அபயின் கையில், தடிமனான குச்சியால் பலமுறை தாக்கியுள்ளார். அடியால் வலி தாங்க முடியாமல் அலறிய மாணவர், அங்கேயே கையை பிடித்துக்கொண்டு விழுந்தார். பின்னர் மாணவர் வலியால் அலற, அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அபய்க்கு கையில் முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து பெற்றோர் புகார் தெரிவித்ததையடுத்து, மாணவரை தாக்கிய ஆசிரியரை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.