சந்திரபாபு நாயுடு - பவன் கல்யாண் பதவியேற்பு புதிய தலைமுறை
இந்தியா

ஆந்திரா முதலமைச்சராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு... அமைச்சரவையில் பவன் கல்யாண்!

ஜெனிட்டா ரோஸ்லின்

மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேச கட்சியும், ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தனது வெற்றித்தடத்தை பதிவு செய்துள்ளது.

175 இடங்களை உள்ளடக்கிய ஆந்திர மாநில சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில், தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி 164 இடங்களைக் கைப்பற்றியது. இந்தவகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், இன்று பிற்பகல் 11.30 மணி அளவில், சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். இவருக்கு கவர்னர் நசீர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

மேலும் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண், சந்திரபாபுவின் மகன் நாரா லோகேஷ் உட்பட 24 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

கிருஷ்ணா மாவட்டம் கண்ணாவரம் பகுதியில் உள்ள தொழில்நுட்ப பூங்கா மைதானத்தில் நடைபெற்ற இப்பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், பாஜக தலைவர் தமிழிசை, நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

ஆந்திராவின் கிங் மேக்கர்... அரசியலில் ராஜதந்திரி... மதிநுட்பம் மிக்கவர் என்றெல்லாம் அழைக்கப்படும் சந்திரபாபு நாயுடு, இன்று நான்காவது முறையாக முதலமைச்சர் அரியணையில் ஏறியுள்ளார்!