ஈரானில் இருந்து தப்பி வந்த மீனவர்கள் முகநூல்
இந்தியா

ஈரானில் இருந்து தப்பிவந்த மீனவர்கள்; Real life ஆடு ஜீவிதம் ஸ்டோரி!

PT WEB

செய்தியாளர்: ஆனந்தன்

உயிரோடு இருந்தால் சொந்த ஊர் செல்வோம்.. இல்லையெனில் கடலில் உயிர் போகட்டும்.. என கடல் தாயை நம்பி ஈரானில் இருந்து தப்பி வந்த மீனவர்களுக்கு மறு வாழ்வு அளித்துள்ளது இந்திய கடலோர காவல்படை.. பல சவால்களுக்கு மத்தியில் தமிழக மீனவர்கள் இந்தியாவிற்கு பயணித்ததன் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு.

ஈரானில் இருந்து தப்பி வந்த மீனவர்கள்

14 நாட்கள்.. 3ஆயிரம் கிலோ மீட்டர் கடல் மைல் தூரம்.. எப்போது எந்த நாட்டில் சிக்குவோம் எனத் தெரியாமல் உயிரை பணயம் வைத்து சொந்த நாட்டை அடைந்துள்ளனர் இந்த மீனவர்கள்... ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரியைச் சேர்ந்த ஆறு மீனவர்கள், நல்ல வருவாய் ஈட்டி குடும்பத்தை காப்பற்றி விடலாம் என்ற நம்பிக்கையில் ஈரானுக்கு வேலைக்குச் சென்றுள்ளனர்.

ஆனால் தாங்கள் நினைத்த கனவுகள் அனைத்தையும் தகர்த்தெரியும் வகையில் அங்கே நடந்ததோ வேறு.. ஈரானில் இருந்த அரேபிய முதலாளி ஊதியம் கொடுக்காமல் மீனவர்களை கொடுமைபடுத்தி வந்துள்ளார். இதனால் செய்வதறியாது தவித்து வந்த மீனவர்கள் வேறு வழியின்றி விசைப்படகு மூலம் ஈரானில் இருந்து இந்தியாவிற்கு பயணத்தை தொடங்கியுள்ளனர்.

வரும் நாடுகளில் இருந்த கடலோர காவல்படையினர் அனைவரும் இவர்களுக்கு பேருதவியாக இருந்த நிலையில், இந்தியாவிற்குள் நுழைந்ததும் டீசல் தீர்ந்ததால் உயிருக்காகப் போராடிய ஆறு மீனவர்களை இந்திய கடலோர காவல் படை பத்திரமாக மீட்டு கரை சேர்த்துள்ளது.

ஈரானில் அறிமுகம் இல்லாத அரேபிய முதலாளிகளை நம்பி சென்றால் தங்களைப் போல சிக்கிக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளதால், வெளிநாட்டிற்கு வேலை செல்ல முயற்சிப்பவர்கள் முழுமையாக விசாரித்துச் செல்லுமாறு அங்கிருந்த வந்த மீனவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

அதிக வருவாய் ஈட்டலாம் என நம்பி வெளிநாட்டிற்கு செல்பவர்களுக்கு இந்த மீனவர்களின் வாழ்க்கை ஒரு பாடமாக அமைந்துள்ளது.