சுதா மூர்த்தி pt web
இந்தியா

“மீண்டும் இந்த தவறை செய்யாதீங்க” - சுதா மூர்த்திக்கு தமிழ்நாட்டு பூசாரி கொடுத்த அட்வைஸ்... ஏன்?

Angeshwar G

பழுதான பேருந்து

எழுத்தாளரும், மாநிலங்களவை எம்.பி-யுமான சுதா மூர்த்தி தனது சமூக நலப் பணிகளுக்காக அறியப்பட்டவர். இந்நிலையில் அவர் தமிழ்நாட்டில் தனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றை கூறி, வாழ்வை எப்படிப் பார்க்கவேண்டும் என்பதை நெகிழ்ச்சியுடன் தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார். ஆனால், அதில் கூறப்பட்டுள்ள அறிவுரை அவருடையது அல்ல.... தமிழ்நாட்டில் ஏதோ இடத்தில் இருக்கும் ஒரு கோவில் பூசாரியின் அறிவுரை. என்ன அறிவுரை அது? பார்க்கலாம்...

சுதா மூர்த்தி

இன்ஃபோசிஸ் நிறுவனரான நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி, சமீபத்தில் தமிழ்நாட்டில் சுவாமி மலை அருகே காரில் சென்று கொண்டிருந்துள்ளார். பயணத்தின் போது கார் ஓரிடத்தில் பழுதாகியுள்ளது. கார் ஓட்டுநர் சுதா மூர்த்தியிடம் அருகில் ஒரு கோவில் இருக்கிறதென்றும், அங்கே காத்திருக்கலாம் என்றும் தெரிவிக்க சுதா மூர்த்தி கோவிலுக்கு சென்றுள்ளார்.

பணத்தை மறுத்த பூசாரி

சுதா மூர்த்தி கோவிலுக்குச் சென்றதும் கோவிலில் இருந்த பார்வையற்ற பூசாரி ஒருவரும், அவரது மனைவியும் அவரை வரவேற்றுள்ளனர். அவர் மாநிலங்களவை எம்.பி. மற்றும் எழுத்தாளர் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. அவர்களது உபசரிப்புகளினால் சுதா மூர்த்தி நெகிழ்ந்துள்ளார். கடவுளை தரிசித்ததும், தட்சனையாக 100 ரூபாயை கொடுத்துள்ளார். ஆனால் அந்த பூசாரி ‘இந்த பணம் எங்களுக்கு அதிகம்’ என தெரிவித்து அதை வாங்குவதற்கு தயங்கியுள்ளார். இதனால் ஈர்க்கப்பட்ட சுதா மூர்த்தி அவருக்கு மேலும் பொருளாதார உதவிகளை செய்ய முற்பட்டுள்ளார்.

பூசாரியும் அவரது மனைவியும் பொருளாதார ரீதியாக கஷ்டத்தில் இருந்ததையும் கண்டுகொண்ட நிலையில், அவர்களின் பெயர் மற்றும் விபரங்களைக் கேட்டுள்ளார். சுதா மூர்த்தி கோவிலிருந்து கிளம்பும் பொழுது, பூசாரிக்கும் அவரது மனைவிக்கும் 20 ஆயிரம் ரூபாயை பண உதவிக்காக அளிப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால், அந்த பூசாரியோ அந்த உதவியை நிராகரித்துள்ளார்.

பூசாரி கொடுத்த விளக்கம்

சுதா மூர்த்தியிடம் இதுதொடர்பாக பேசிய அந்த பூசாரி, “நீங்கள் யாரென்று எனக்குத் தெரியாது. ஆனால், நான் உங்களுக்கு ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். வாழ்க்கையில் மீண்டும் இந்த தவறை செய்யாதீர்கள்” என தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு திகைத்த சுதா மூர்த்தி, “ஏன் இப்படி பேசுகிறீர்கள்?” என கேட்டுள்ளார். அதற்கு பதில் கொடுத்த பூசாரி, “இந்தப் பணத்தை நீங்கள் எனக்குக் கொடுத்தால் சுமையாகி விடும். கிராம மக்கள் இப்போது எங்களை நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள். அதிகமான பணம் எங்களிடம் இருக்கிறது என தெரிந்தால் அவர்கள் எங்களை இறந்துவிட வேண்டும் என்று கூட நினைக்க கூடும். அதுமட்டுமல்லாமல் இது எங்களுக்கு உதவாது. கடவுள் எங்களுக்கு கொடுத்தது போதும்...” என தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட சுதா மூர்த்தி நெகிழ்ந்து போயிருப்பதாக தெரிவித்துள்ளார்.

பார்வை குறைபாடு மற்றும் வயோதிகத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும், பூசாரி தன் உள்ளத்தால் மிகப்பெரிய பணக்காரராக இருந்துள்ளார். ஆம்... உண்மையான செல்வம் என்பது பொருள் வளத்தினால் அளக்கப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.