இந்தியா

அவசரப்படாதீர்கள்..டெல்லி தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது - உச்சநீதிமன்றம்

rajakannan

டெல்லி அரசு விவகாரத்தில் துணை நிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இது புதுச்சேரிக்கு பொருந்தாது என்று தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

டெல்லியில் மாநில அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே தொடர்ச்சியாக அதிகார மோதல் இருந்து வருகிறது. இதனிடையே, டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் நிர்வாகத்தில் துணை நிலை ஆளுநருக்கே அதிகாரம் உள்ளதாக டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இதுதொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் வந்தபோது உச்சநீதிமன்றம் பல அதிரடி தீர்ப்புகளை வழங்கியுள்ளது. அதன்படி, “துணை நிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது. நிர்வாக அதிகாரம் முழுவதும் தேர்தெடுக்கப்பட்ட அரசிடமே உள்ளது என்றும் ஜனநாயகத்தில் அதிகாரம் தொடர்பான குழப்பத்துக்கு இடமில்லை. அமைச்சரவையின் முடிவை துணைநிலை ஆளுநருக்கு தெரிவிக்கலாம். ஆனால் ஒப்புதல் பெற வேண்டும் என்று அவசியமல்ல” என்று தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.

டெல்லியில் நடப்பதை போல் புதுச்சேரியிலும் துணை நிலை ஆளுநர் கிரன் பேடிக்கும், முதலமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே அதிகாரப் போட்டி நிலவி வருகிறது. தங்களுடைய அதிகாரத்தில் கிரென் பேடி தலையிடுவதாக புதுச்சேரி அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

இத்தகையை நிலையில் உச்சநீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பு டெல்லி மாநிலத்தைப் போல் புதுச்சேரிக்கும் பொருந்தும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். உச்சநீதிமன்ற தீர்ப்பை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வரவேற்றுள்ளார். அதேவேளையில் புதுச்சேரிக்கும் இந்தத் தீர்ப்பு பொருந்தும் என்று கூறியுள்ளார்.  மேலும், துணை நிலை ஆளுநர் கிரன் பேடி தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்வார் என்று நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்தார். 

இந்நிலையில், உச்சநீதிமன்றம் டெல்லி மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்துமா என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளது. தீர்ப்பின் 180வது பாயிண்டில் இதுகுறித்து நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். அதில், “புதுச்சேரியானது, அந்தமான்-நிக்கோபார் தீவுகள், டாமன், டையூ, தாதர் மற்றும் நாகர் ஹேவலி ஆகிய யூனியன் பிரதேசங்களில் இருந்து வித்தியாசமானது. டெல்லிக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு வெளியான உடன் நீங்கள் அவசரப்படலாம். ஆனால், புதுச்சேரியை டெல்லி அரசுடன் ஒப்பிட முடியாது. டெல்லியானது முழுக்க சட்டப்பிரிவு 239ஏ-வில் உள்ள பரிந்துரைகளின் படி நிர்வகிக்கப்படுகிறது” என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.