இந்தியா

“சிறந்த கல்வி கொள்கைகளை கொண்டுள்ளது தமிழகம்” - உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து

webteam

தமிழகத்தில் சிறந்த மாணவர் சேர்க்கை கொள்கைகள் உள்ளன என உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஷ்வர ராவ் கருத்து தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு குளறுபடிக்காக 196 கருணை மதிப்பெண்கள் வழங்கக்கோரி தொடரப்பட்ட மனுவின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது வாதாடிய மத்திய அரசு வழக்கறிஞர் மனிந்தர் சிங், எந்த ஒரு பொதுத்தேர்வையும் அனுமதிக்க கூடாது என்ற மனநிலையில் தமிழக அரசு உள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

ஆனால் அவரது இந்த வாதத்தை ஏற்க நீதிபதி நாகேஷ்வர ராவ் மறுத்துவிட்டார். பொதுவாக தமிழக அரசின் செயல்பாட்டை இவ்வாறு கூறுவதை தன்னால் ஏற்க இயலாது எனவும் நீதிபதி தெரிவித்தார். தான் தமிழக அரசு வழக்குகளை நிறைய வாதாடியிருப்பதாகவும், தமிழகத்தின் கல்வி கொள்கைகள் தனக்கு நன்றாக தெரியுமென்றும் அவர் கூறினார். நீட்டை தமிழக அரசு எதிர்க்க காரணமே, அவர்களின் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்களே என்ற காரணத்தால்தான் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.