இந்தியா

கிராம நீதிமன்றங்கள் அமைக்கப்படுமா? - உயர்நீதிமன்றங்கள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

webteam

கிராம நீதிமன்றங்களை அமைக்கக்கோரி தொடரப்பட்ட மனு மீது அனைத்து உயர்நீதிமன்றங்களும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி இந்திய குடிமகன் யாரும் சமுதாய பொருளாதார மற்றும் இதர காரணங்களுக்காக நீதி பெறுவதில் தாமதம் இருக்கக் கூடாது எனவும், இதன் காரணமாக கிராமங்களில் நீதிமன்றங்கள் அமைப்பதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த சட்டத்தின்படி பல்வேறு மாநில அரசுகள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி பொதுநல அமைப்பு ஒன்று சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த 2020-ம் ஆண்டு விசாரணைக்கு வந்தபோது அனைத்து மாநில அரசுகளும் நான்கு வார காலத்திற்குள் இதுதொடர்பான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்றும், உயர் நீதிமன்றங்கள் இந்த விவகாரத்தில் மாநில அரசுகளுடன் ஆலோசனையில் ஈடுபட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன் பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு வராமல் இருந்த நிலையில், இன்று இந்த மனுமீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரத்தில் ஒவ்வொரு உயர் நீதிமன்றங்களும் கண்காணிப்பு அமைப்பு என்பதனால், அவர்களையும் எதிர்மனுதாரர்களாக சேர்க்க விரும்புவதாகவும், நாட்டில் உள்ள அனைத்து உயர்நீதிமன்றங்களும் இந்த விவகாரத்தில் பதிலளிக்குமாறு நோட்டீஸ் பிறப்பித்து மனுமீதான விசாரணையை டிசம்பர் 5-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.