இந்தியா

குழந்தைகள் ஏன் ஈயம் கலந்த மேகியை சாப்பிட வேண்டும் ? உச்சநீதிமன்றம் கேள்வி

webteam

மேகி நூடுல்ஸ் விவகாரத்தில் நெஸ்லே இந்தியா நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

வணிக நெறிகளை பின்பற்றத் தவறியது, லேபிளில் தவறான தகவல் அளித்தது, தவறான தகவல்களுடன் விளம்பரம் ஆகியவற்றுக்காக நெஸ்லே இந்தியா நிறுவனத்திடம் மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் 640 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தது. இவ்வழக்கு தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் நடந்து வந்தது. இதையடுத்து நெஸ்லே இந்தியாவின் மேகி நூடுல்ஸில் காரீயத்தின் அளவு அதிகமாக இருப்பதாக கூறி அதன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டு இதை எதிர்த்து நெஸ்லே  இந்தியா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதில் வழக்கை தொடர மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. மேலும் மேகி நூடுல்ஸை மைசூருவில் உள்ள ஆய்வகத்தில் சோதனை செய்து அறிக்கை அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதன்படி மைசூரு ஆய்வகத்தில் மேகி நூடுல்சை ஆய்வு செய்து அதன் அறிக்கை விவரங்கள் சீலிடப்பட்ட கவரில் வைத்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. 

இந்நிலையில் வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்த போது நெஸ்லே இந்தியா நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனர். 

கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள மத்திய உணவுத் தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கூடத்தின் சோதனை முடிவுகள் அடிப்படையில் இதற்கு அனுமதி அளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.  மேலும் குழந்தைகள் ஏன் ஈயம் கலந்த மேகியை சாப்பிட வேண்டும் என கேள்வி எழுப்பினர்.