தலைமை நீதிபதி சந்திரசூட் pt web
இந்தியா

அயோத்தி முதல் பாலின சேர்க்கை வரை| 600 அதிரடி தீர்ப்புகள்.. தலைமை நீதிபதி சந்திரசூட் கடந்துவந்த பாதை!

நிரஞ்சன் குமார்

தேசத்தில் நீதித்துறை சார்ந்து அதிகம் எதிரொலித்த பெயர்களில் ஒன்று தனஞ்செயன் எஸ்வந்த் சந்திரசூட். 1959-ஆம் ஆண்டு நவம்பர் 11-ந்தேதி ஒய். வி. சந்திரச்சூட் மகனாக பிறந்தவர். சந்திரச்சூடும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த பெருமைக்குரியவர். முதலில் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பொருளாதாரம் மற்றும் கணிதத்தில் ஹானர்ஸ் பட்டப் படிப்பை நிறைவு செய்தார் சந்திரசூட். பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார்.

சட்ட மேற்படிப்பிற்காக 1983 ஆம் ஆண்டு ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் இணைந்த இவர், தமது படிப்பாற்றலால் பல்வேறு ஸ்காலர்ஷிப்புகளை பெற்றார். பல்கலைக்கழகத்திலேயே சட்டத்துறைக்கான ஆராய்ச்சிக்காக டாக்டர் பட்டமும் பெற்றார். அதன் பிறகு இந்தியா திரும்பிய அவர் மகாராஷ்டிரா மாநில பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார். ஆரம்ப கட்டத்தில் தொழிலாளர் நலனுக்கான வழக்குகளில் அதிக கவனம் செலுத்தினார்.

பின்னர், எச்ஐவி பாதிப்புக்கு உள்ளான நபர்களுக்கு பணி மறுக்கப்பட்டதற்கு எதிராக பல்வேறு வழக்குகளில் ஆஜரானார். 38 வது வயதிலலேயே மூத்த வழக்கறிஞர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றார். 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு இத்தகைய அங்கீகாரம் கிடைக்கப்பெறுவது அரிதாக பார்க்கப்பட்டது. பிறகு மத்திய அரசின் கூடுதல் சொலிஸ்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.

600 தீர்ப்புகளை தனியாக எழுதியவர்

2000-மாம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி பெற்றார். பிறகு 2013 ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். 2016 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார். 2022 நவம்பர் 7ஆம் தேதி வரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். 2022 நவம்பர் எட்டாம் தேதி தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.

இவரது பதவிக் காலம் வரும் நவம்பர் 10ஆம் தேதி உடன் நிறைவடைகிறது. தனது 8 ஆண்டு கால உச்ச நீதிமன்ற பதவி காலத்தில் சுமார் 600 தீர்ப்புகளை தனியாக எழுதியுள்ளார். இதை தவிர ஆயிரத்து 200க்கும் அதிகமான உச்ச நீதிமன்ற தீர்ப்புகளில் அங்கம் வகித்திருக்கிறார். தற்போது உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் அதிக எண்ணிக்கையில் தீர்ப்புகளை எழுதியது இவர்தான். இவர் எழுதிய தீர்ப்புகளில் சுமார் 68 தீர்ப்புகள் அரசியல் சாசனத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டது.

அதிலும் குறிப்பாக 2017 ஆம் ஆண்டு ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மத அடிப்படையில் வாக்குகளை சேகரிக்க கூடாது என வழங்கிய தீர்ப்பு முக்கியமானது. அதேபோல், 2017 ஆம் ஆண்டு ஆதார் தொடர்பான வழக்கை விசாரித்த போது தனிநபர் ரகசியம் என்பதும் அடிப்படை உரிமை தான் என்ற ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பு ஆகிவற்றில் அங்கம் வகித்திருக்கிறார்.

சந்திரசூட் வழங்கிய முக்கியத் தீர்ப்புகள்

2018 ஆம் ஆண்டு, மதம் மாறி திருமணம் செய்த போது, தமது மகள் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளார் என பெற்றோர் நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கில் வயது வந்த நபர்களுக்கு தங்களது திருமணத்தையும் தங்களது மதத்தையும் தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது என சந்திரசூட் எழுதிய தீர்ப்பு மிக முக்கியமானது.

தலைமை நீதிபதி சந்திரசூட்

டெல்லி மற்றும் டெல்லி துணைநிலை ஆளுநருக்கு இடையேயான அதிகார பகிர்வு தொடர்பாக 2018-ல் இவர் வழங்கிய தீர்ப்பு முக்கியமானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக்கு தான் அதிக அதிகாரங்கள் இருப்பதாக தீர்ப்பெழுதினார். ஓரினச்சேர்க்கை உறவு குற்றமற்றது என சந்திரசூட் அமர்வு வழங்கிய தீர்ப்பு சர்வதேச அளவில் பேசு பொருளானது. தங்களது பாலினம் சார்ந்த முடிவுகளை ஒரு தனி நபர் எடுப்பது ஒவ்வொரு தனிநபரின் அடிப்படை உரிமை என உரிமைக் கதவுகளை திறந்து விட்டார்.

லேண்ட்மார்க் தீர்ப்புகள்

பல ஆண்டுகளாக நடைபெற்ற அயோத்தி வழக்கில் சர்ச்சைகுரிய இடம் கோவிலுக்குச் சொந்தமானது என இவர் எழுதிய தீர்ப்பு வரலாற்றில் மிக முக்கியமான ஒன்று. தேர்தல் பத்திரத்தை ரத்து செய்து வழங்கிய தீர்ப்பு, மகாராஸ்டிரா உள்பட பல்வேறு மாநிலங்களில் அரசியல் குழப்பங்கள் தொடர்பான வழக்கு, ஆளுநர் சபாநாயகர்கள் அதிகாரம் தொடர்பான வழக்கு என பல முக்கியமான வழக்குகளில் பல லேண்ட்மார்க் தீர்ப்புகளை வழங்கி இருக்கின்றார் சந்திரசூட்

பல ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகளை டிஜிட்டல் முறைக்கு மாற்ற வேண்டும் என பல தலைமை நீதிபதிகள் முயற்சிகள் மேற்கொண்டு வந்தனர். ஆனால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்திரசூட் பொறுப்பேற்ற பிறகு தான் அந்தப் பணிகள் வேகம் எடுத்தன. வழக்குகளை நேரடியாக ஆன்லைனிலேயே பதிவு செய்யும் நடைமுறை, பல்வேறு முக்கிய வழக்குகளை நேரலையில் காணும் வசதிகள், இ - ஸ்வாகதம் என்ற டிஜிட்டல் முறை போன்ற பல்வேறு விஷயங்களையும் முன்னெடுப்புகளையும் அவர் மேற்கொண்டு இருக்கிறார்.

மோடி, சந்திரசூட்

அதே நேரத்தில் சில சர்ச்சைகளில் இருந்தும் இவர் தப்பவில்லை. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின் போது தனது வீட்டில் நடந்த பூஜைக்கு பிரதமர் நரேந்திர மோடியை நேரில் அழைத்து இருந்தது பேசுபொருளானது. பணிக்காலம் இன்னும் ஒரு மாதம் இருக்கக்கூடிய சூழலிலும், இன்னும் சில தீர்ப்புகளை அவர் எழுதி வருகிறார் எனக் கூறப்படுகிறது.