இந்தியா

"சார் வேண்டாம் ராகுல் என்று அழையுங்கள்" - கல்லூரி மாணவிகளிடம் கலகல உரையாடல்

webteam

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஹாய் ராகுல் என கல்லூரி மாணவி அழைத்தது அங்கு சிரிப்பலையை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் தேர்தல் பரப்புரையை தொடங்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சென்னை வந்துள்ளார். டெல்லியிலிருந்து விமானம் மூலம் வந்த ராகுல்காந்தி அங்கிருந்து ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு சென்றார். 

அங்கு கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடல் செய்து வருகிறார். அப்போது பேசிய ராகுல்காந்தி, தன்னை ராகுல்காந்தி சார் என்று அழைக்க வேண்டாம். ராகுல் என்றே அழையுங்கள் எனத் கேட்டுக்கொண்டார். மேலும் சுலபமான கேள்விகளை கேட்காதீர்கள். கடினமான கேள்விகளை கேளுங்கள் எனவும் கூறினார். 

இதையடுத்து கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர் எழுந்து ஹாய் ராகுல் என அழைத்தார். உடனே அங்கு கூடியிருந்த மாணவிகள் கோஷங்களை எழுப்பினர். மேலும் மாணவிகள் மத்தியில் சிரிப்பலை நீடித்தது. 

அப்போது பேசிய ராகுல்காந்தி, இந்தியாவில் கல்விக்காக அதிக நிதி செலவிடப்பட வேண்டும் எனவும் தற்போது குறைந்த நிதியே செலவிடப்படுகிறது எனவும் தெரிவித்தார். வட இந்தியாவை விட தென் இந்தியாவில் பெண்கள் சிறப்பாக நடத்தப்படுகிறார்கள் எனவும் பெண்களை இரண்டாம் நிலை என கருதாமல் சமநிலை என்றே கருத வேண்டும் எனவும் ராகுல் கேட்டுக்கொண்டார்.