இந்தியா

காதலை ஏற்காத மாணவியை நடுரோட்டில் குத்திக்கொன்ற ஒருதலை காதலன்!

webteam

காதலை ஏற்காத மாணவியை நடுரோட்டில் சரமாரியாக குத்திக்கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

மகாராஷ்ட்ரா மாநிலம் தானே-வை சேர்ந்த கல்லூரி மாணவி பிராச்சி ஸேட்(21). நேற்று தனது டூவீலரில் கிழக்கு விரைவு சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை இளைஞர் ஒருவர் பின் தொடர்ந்து வந்தார். ஆர்டிஓ அலுவலகம் அருகே வந்தபோது  டூவீலரை மறித்த அந்த இளைஞர், ’என் காதலுக்கு என்ன பதில்?’ என்று கேட்டுள்ளார். ‘நான் உன்னைக் காதலிக்கலை. அடிக்கடி என்னை இப்படி தொந்தரவு பண்ணாத. போலீஸ்ல புகார் பண்ணிருவேன்’ என்று சொன்னார் பிராச்சி. 

இதைத் தாங்க முடியாத அந்த இளைஞர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிராச்சியை நடுரோட்டில் வைத்து சரிமாரியாகக் குத்தினார். இதில் நிலைகுலைந்த பிராச்சி ரத்த வெள்ளத்தில் அப்படியே சரிந்தார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த சிலர் அதை புகைப்படம் எடுப்பதிலேயே குறியாக இருந்தனரே தவிர தடுக்கவோ, உதவி செய்யவோ முன்வரவில்லை.

அவரை கொலை செய்த இளைஞர் தப்பி ஓடி விட்டார். தகவல் அறிந்து வந்த போலீசார், பிராச்சியின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரணையில் இறங்கிய போலீசார் பிவண்டியை சேர்ந்த ஆகாஷ் பவார் (25) என்பவரை கைது செய்தனர்.

ஆகாஷ், பலமுறை பிராச்சியை தொடர்ந்து சென்று காதல் டார்ச்சர் கொடுத்திருக்கிறார். ஆனால், அவரது காதலை தொடர்ந்து நிராகரித்தி ருக்கிறார் பிராச்சி. இது தொடர்பாக ஏற்கனவே போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டிருந்தது. போலீசார் அப்போது ஆகாஷை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். அப்போதே வழக்குப் பதிவு செய்து கைது செய்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது என்று அப்பகுதியினர் தெரிவித்தனர்.

நடுரோட்டில் மாணவி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.