இந்தியா

காதலியை கொன்று வீட்டுக்குப் பின் புதைத்த ராணுவ வீரர்!

webteam

காதலியை கொன்று வீட்டுக்குப் பின் புதைத்த ராணுவ வீரரை போலீசார் தேடி வருகின்றனர். 

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகில் உள்ள நெய்யாற்றின்கரா திருபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராக்கி. இவர் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். ஜூன் 21 ஆம் தேதி முதல் இவரை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், அவரது பெற்றோர் பூவார் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார், காணாமல் போன ராக்கியை தேடி வந்தனர். அவரது செல்போன் பதிவுகளை வைத்து, அவர் அகில் என்பவரை காதலித்து வந்தது தெரியவந்தது. 

இதையடுத்து அவரை பிடிக்க முயன்றனர். ஆனால், அவர் நண்பர் ஆதர்ஷ் சிக்கினார். அவர் ராக்கியை கொன்று, அகிலின் வீட்டுக்குப் பின் புதைத்துவிட்டோம் என்று தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த போலீசார், மேலும் விசாரித்தனர். 

ராணுவ வீரரான அகில், ராக்கியுடன் நெருங்கி பழகியுள்ளார். அவரை திருமணம் செய்வதாகவும் கூறியிருக்கிறார். இந்நிலையில் ராக்கிக்குத் தெரியாமல் வேறொரு பெண்ணுடன் அகிலுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது தெரியவந்ததும் ஆவேசமடைந்த ராக்கி, தன்னை ஏமாற்றிவிட்டதாக அகிலுடன் சண்டையிட்டார். பின்னர், அகிலுக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணின் வீட்டுக்குச் சென்று நடந்த விஷயத்தை சொன்னார். 

இதை அறிந்த அகில், கோபத்தின் உச்சிக்குச் சென்றார். ‘இந்தப் பிரச்னை பற்றி பேசி தீர்க்கலாம்’ என்று ராக்கியை அம்பூரியில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்தார் அகில். சென்றார் ராக்கி. இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் ராக்கியை கழுத்தை நெறித்துக் கொன்றார் அகில். பின் தனது தம்பி ராகுல், அவரின் நண்பர் ஆதர்ஷ் உதவியுடன், வீட்டுக்குப் பின்பக்கம் யாருக்கும் தெரியாமல் புதைத்தனர். குழிதோண்டியது தெரியாமல் இருக்க அந்த இடத்துக்கு மேலே சில செடிகளை நட்டனர். 
பின்னர் அகில், தான் பணியமர்த்தப்பட்டிருக்கும் டெல்லிக்கு சென்றுவிட்டார்.

போலீசார், புதைக்கப்பட்டிருந்த ராக்கியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டெல்லியில் இருந்து அகிலை கேரளாவுக்கு கொண்டு வரும் வேலையில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர். காதலியை ராணுவ வீரர் கொன்று புதைத்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.